தசாவதாரத்துக்கு தடையில்லை
கலைஞானி கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்து வரும் தசாவதாரம் படத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி அப்படத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடிக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் பிரமாண்டத் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தசாவதாரம்.இந்தப் படத்தை ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.
இந் நிலையில் சென்னை தாம்பரத்தைச் ேசர்ந்த செந்தில்குமார் என்பவர் தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது. அதைத் திருடி தசாவதாரம் படத்தை எடுத்து வருகிறார்கள். எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து செந்தில்குமார் சார்பில் டிவிஷன் பெஞ்ச் முன்பு மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. தங்களது கதைகளை தாக்கல் செய்யுமாறும் இரு தரப்புக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையின்போது கமல்ஹாசனையும், செந்தில்குமாரையும் நேரில் வரவழைத்து நீதிபதிகள் விசாரித்தனர்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கமல்ஹாசனின் படத்திற்கும், செந்தில்குமாரின் கதைக்கும் பெருமளவில் வேறுபாடுகள் உள்ளன. இரு கதைகளிலும் 10 வேடங்கள் என்பது மட்டுமே ஒற்றுமையான விஷயம். மற்றபடி இரு கதைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனவே தசாவதாரம் படத்திற்குத் தடை விதிக்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதன் மூலம் தசாவதாரம் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் நீங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











