ரஜினி முருகன் வெற்றி எனக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுத்திருக்கு... சொல்வது சிவகார்த்திகேயன்
சென்னை: நான் ரஜினியின் தீவிர ரசிகன். சிறு வயதில் இருந்து ரஜினி படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். சினிமாவிற்கு வர முக்கிய காரணமே ரஜினிதான் என்று கூறியுள்ளார் சிவகார்த்திக்கேயன். ரஜினி முருகன் தனக்கு முக்கியமான படம் என்று கூறியுள்ள அவர், இந்த படம் வெளியாக தனது சம்பளத்தை விட்டு கொடுத்ததாக கூறியுள்ளார்.
நீண்ட நாட்களாக நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த ரஜினி முருகன் பொங்கல் அன்று திரைக்கு வந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு போலவே ரஜினி முருகனுக்கும் ரசிகர்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ரஜினி முருகன்' படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகன். அதனால் தான் தற்போது வெளியாகியுள்ள படத்திற்கு ‘ரஜினி முருகன்' பெயரை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. தற்போது ரஜினியை பற்றியும் ரஜினி முருகன் படத்தைப் பற்றியும் மேலும் சுவாரஸ்யமான செய்தியை பகிர்ந்துள்ளார்.

நிம்மதியாக தூங்கினேன்
ரஜினி முருகன் வெற்றி குறித்து பேசியுள்ள சிவகார்த்திக்கேயன், இந்தப்படம் என் வாழ்க்கையில் முக்கியமான படம். படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆனாலும், பல பிரச்சினைகளால் படம் வெளியாகாமல் தவித்தது.உண்மையைச் சொல்லப்போனால் கடந்த 10 மாதங்களாக நான் நிம்மதியாக தூங்கவில்லை. படம் வெளியான அன்று தான் நன்றாக தூங்கினேன் என்று கூறியுள்ளார்.

சம்பளம் முக்கியமில்லை
சினிமாவில் நான் நடிப்பதே, படம் வெளியாகி ரசிகர்கள் கைதட்டி ரசிகக் வேண்டும், நமக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே, சம்பளம் எனக்கு ஒரு முக்கியமான விஷயமாக படவில்லை. என் குடும்பத்திலும் ஏன் சம்பளம் இல்லை என்று கேட்கவில்லை.

சம்பளத்தை விட்டுக்கொடுத்தேன்
இந்தப் படத்தின் நிதிப் பிரச்சினைகளுக்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை. ஆனாலும், என் சம்பளத்தை விட்டுக் கொடுத்தேன். ஒரு கட்டத்தில் என் சம்பளம் மைனஸ் 50 லட்ச ரூபாய் ஆகிவிட்டது.

ரஜினி ரசிகன்
நான் ரஜினியின் தீவிர ரசிகன். சிறு வயதில் இருந்து ரஜினி படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். சினிமாவிற்கு வர முக்கிய காரணமே ரஜினிதான். என் வாழ்க்கையில் என் அம்மா எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு ரஜினியும் என் மனதில் இருக்கிறார். தற்போது ரஜினி நடிக்கும் படங்களான ‘கபாலி', ‘2.ஓ' படங்கள் வெளியாகும் போது எங்கிருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிடுவேன்' என்றும் கூறியுள்ளார்.

தில்லு முல்லு ரிமேக்
ரஜினி, விஜய் இடத்தை பிடிக்க நினைக்கவில்லை. அவர்கள் பல கமர்ஷியல் வெற்றி கொடுத்திருக்கிறார்கள். அந்த படங்களின் சாயல் என் படங்களிலும் இருக்கலாம். ரஜினியின் 'தில்லு முல்லு' ரீமேக்கில் நடிக்க ஆசை. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, காமெடிக்கு முக்கியத்துவமுள்ள காதல் காதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

இனி கவனமாக இருக்கேன்
சினிமாவில் நான் நடிப்பதே, படம் வெளியாகி ரசிகர்கள் கைதட்டி ரசிகக் வேண்டும், நமக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே, சம்பளம் எனக்கு ஒரு முக்கியமான விஷயமாக படவில்லை. இனி, வருங்காலங்களில் என் படங்களில் இது போன்ற நிதிப் பிரச்சினைகள் வராதபடி கவனமாக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











