நான் இன்னும் போராடும் நடிகர்தான் சகோதரா.. இப்படிக்கு "மேடி"!
சென்னை: தன்னை லெஜண்ட் என்று புகழ்ந்த ரசிகரிடம், தான் இன்னும் போராடிக் கொண்டிருக்கும் நடிகர் தான் என தன்னடக்கமாக பதிலளித்துள்ளார் நடிகர் மாதவன்.
மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். முதல்படத்திலேயே அவருக்கென தனி ரசிகைகள் கூட்டம் உருவானது.
தமிழில் சாக்லேட் பாயாக கொண்டாடப்பட்ட மாதவனை, ரசிகர்கள் மேடி என்றே செல்லமாக அழைக்கின்றனர்.

இறுதிச்சுற்று...
ஆனால், தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்காமல் சிறிது இடைவெளி விட்ட மாதவன், இந்தியில் பிசியானார். தற்போது நீண்ட இடைவேளைக்குப் பின் அவர் நடித்த இறுதிச்சுற்று படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடியது.

தேசிய விருது...
இப்படத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருந்தாலும், மாதவனை ரசிகர்கள் கொண்டாடவே செய்தனர். அப்படத்தின் நாயகி ரித்திகா சிங்கிற்கு தேசிய விருதும் கிடைத்தது.

வாழ்த்துக்கள்...
இந்நிலையில், சமீபத்தில் தனது 17வது திருமண நாளைக் கொண்டாடினார் மாதவன். அப்போது அவரது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அதில், ‘லெஜண்டுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்' என அவர் தெரிவித்திருந்தார்.
போராடும் நடிகர்...
அதற்கு பதிலளித்துள்ள மாதவன், "உங்களுக்கு என்னுடைய நன்றிகள். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் லெஜண்ட் இல்லை சகோதரா. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இன்னமும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு நடிகர்தான்'' எனத் தெரிவித்துள்ளார்.

இமயமலையில் கொண்டாட்டம்...
மாதவனும், அவருடைய மனைவி சரிதாவும் தங்களுடைய 17வது திருமண நாளை இமயமலையில் கொண்டாடினர். இது தொடர்பான டிவிட்டில், "மலைச் சிகரங்களில் நேரத்தைச் செலவிடுவதைக் காட்டிலும், 25 ஆண்டுகால நட்பும் 17 வருட மண வாழ்க்கையும் இந்த விழாவை அதிகம் சிறப்பித்துள்ளது" என மாதவன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











