போலீஸ் கெட்டப்புக்கு நானும் ரெடிதாங்க... ஆனா...! - உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தற்போதைய சூழ்நிலையில் படத்தைத் தயாரித்து, சொந்தமாக வெளியிடுவது தான் பெரிய சாதனையாக இருக்கிறது என நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மனிதன்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் வக்கீலாக நடித்த உதயநிதியின் நடிப்பு பாராட்டப்பட தொடர்ந்து இதுபோன்ற படங்களில் நடிக்க உறுதி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனக்கு ஏற்ற கதை அமைந்தால் போலீஸ் வேடங்களில் நடிக்கத் தயார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் உதயநிதி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து உதயநிதி '' 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குபின் 'மனிதன்' திரைப்படம் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இப்படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக பலரும் பாராட்டுகின்றனர்.
குறிப்பாக இப்படத்தைப் பார்த்த பின் எனது தந்தை என்னை கட்டியணைத்துப் பாராட்டினார்.இப்படத்தின் பெயர் தமிழ்ச்சொல் அல்ல என்று கூறி வரிவிலக்கு வழங்க மறுக்கின்றனர். வரிவிலக்கு வழங்குவதில் தற்போதைய அரசு பாரபட்சம் காட்டுகின்றது.
'கெத்து' படத்திற்கு போராடி வரிவிலக்கு பெற்றேன். அதேபோல இப்படத்திற்கும் போராட வேண்டும் என நினைக்கிறேன்.நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் போலீஸ் வேடங்களில் நடிக்கவும் ஆர்வம் கொண்டுள்ளேன்.
தற்போதைய சூழ்நிலையில் படத்தைத் தயாரித்து, சொந்தமாக வெளியிடுவது தான் பெரிய சாதனையாக இருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











