வெளியே சொல்ல முடியாத மன வேதனையில் இருந்தேன்.. ஜெர்மனி பெண் புகார் குறித்து நடிகர் ஆர்யா உருக்கம்!
சென்னை: தன் மீதான மோசடிப் புகாரால் சொல்ல முடியாத மன வேதனையில் இருந்ததாக நடிகர் ஆர்யா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. இந்தப் படத்தில் குட்டி கதாப்பாத்திரத்தில் கள்ளம் கபடம் இல்லாத ரவுடி கெட்டப்பில் நடித்தார்.
முதல் படத்திலேயே பெரும் பாராட்டை பெற்ற ஆர்யா, ஏராளமான பெண் ரசிகைகளை வசமாக்கி கொண்டார். தொடர்ந்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, பட்டியல், வட்டாரம் என பல படங்களில் நடித்தார்.

நான் கடவுள் படம் கொடுத்த பிரேக்
பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தில் அகோரி கெட்டப்பில் நடித்திருந்தார் ஆர்யா. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து சர்வம், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், சேட்டை, ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம், புறம்போக்கு என்கிற பொதுவுடமை, இஞ்சி இடுப்பழகி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, கஜினிகாந்த், மகா முனி, காப்பான், டெடி உட்பட பல படங்களில் நடித்துள்ளார் ஆர்யா.

சார்பட்டா பரம்பரை - ஆர்யாவின் அர்ப்பணிப்பு
கடைசியாக அவரது நடிப்பில் சார்பட்டா பரம்பரை படம் வெளியானது. பா ரஞ்சித் இயத்தில் வெளியான இப்படத்தில் குத்துச்சண்டை வீரராக கபிலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் ஆர்யா. படத்திற்காக ரொம்பவே ஹார்டு வொர்க் செய்திருந்தார் ஆர்யா. ரசிகர்கள் மத்தியில் நடிகர் ஆர்யாவுக்கும் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் ஆர்யாவை பாராட்டினர்.

ஜெர்மனி பெண் அளித்த புகார்
இந்நிலையில் நடிகர் ஆர்யா கடந்த சில நாட்களாக சர்ச்சை ஒன்றில் சிக்கியிருந்தார். அதாவது, ஜெர்மனியில் பணியாற்றி வரும் இலங்கையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.
Recommended Video

சைபர் க்ரைம் போலீஸில் ஆஜர்
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. மேலும் சைபர் க்ரைம் போலீசாரும் ஒரு பக்கம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சைபர் க்ரைம் போலீசார் முன்பு ஆஜரானார் நடிகர் ஆர்யா.

ஜெர்மனி பெண் யாரிடம் ஏமாந்தார்?
அப்போது தன் மீது புகார் அளித்த பெண் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறினார். மேலும் அந்த பெண் யாரிடம் ஏமாந்தார் என்பது குறித்து போலீசார் தான் கண்டு பிடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆர்யாவின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் அவருக்கும் ஜெர்மனி பெண்ணுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்பதை கண்டுபிடித்தனர்.

ஆர்யா போல் நடித்து போலி கணக்கில்
இந்நிலையில் சைபர் க்ரைம் போலீசார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஆர்யா பெயரில் போலி வலைதள பக்கத்தை உருவாக்கி ஜெர்மனி பெண்ணிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. வலைதள ஐபி முகவரியை வைத்து விசாரணை நடத்திய போலீசார், ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இருவரை கைது செய்தனர்.

ஆர்யாவின் உருக்கமான பதிவு
அவர்கள் இருவரும் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் என்பது தெரியவந்தது. இந்நிலையில் நடிகர் ஆர்யா இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

சொல்ல முடியாத வேதனையில் இருந்தேன்
அதில் அவர் கூறியிருப்பதாவது, சென்னை காவல் ஆணையருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்த சென்னை சைபர் க்ரைம் போலீஸாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் வெளிப்படுத்த முடியாத மன வேதனையில் இருந்தேன். என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

900 வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்
ஆர்யாவின் இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஆர்யா போல்
நடித்து மோசடி செய்த இரண்டு பேரையும் பார்த்த இந்த நெட்டிசன், இவர்கள் இருவரையும் பார்க்க அப்படியே ஆர்யா போன்று இருக்காங்கப்பா.. இவங்க பக்கத்துல ஆர்யாவ வச்சு 900 வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.. பெண்களே ஜாக்கிரதையாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்
மற்றொரு ரசிகரான இவர், நீங்கள் ஒரு ஜென்டில்மேன் என்று பெருமை படுகிறீர்கள்.. சூப்பர்.. வாழ்த்துகள்... மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகரான இவர் இருட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனால் உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும். அப்பாவி மக்களை குற்றவாளியாக்க நீதி ஒருபோதும் அனுமதிக்காது என பதிவிட்டுள்ளார்.

இவனை எப்படி ஆர்யா என்று நம்பினார்?
மற்றொரு ரசிகரான இவர், ஆர்யா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் போட்டோவையும் பார்த்து, இவனை எப்படி அந்த பெண் ஆர்யா என நம்பினார் என பதிவிட்டுள்ளார்.

எப்போதும் சந்தேகம் வரவில்லை
ஆர்யாவின் பதிவை பார்த்த இந்த ரசிகர் சார்பட்டா பரம்பரை டா.. நல்ல நேரத்தில் உண்மை வெளிவந்தது. எங்களுக்கு ஆர்யா மீது எப்போதும் சந்தேகம் வரவில்லை. முதல் நாளில் இருந்தே அவர் கூலாகதான் உள்ளார் என பதிவிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் சார்பட்டா பரம்பரை படத்தின் காட்சியையும் ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











