தசாவதாரம் 1000 பிரிண்ட்டுகள்!
கலைஞானி கமல்ஹாசன் 10 வேடங்களில் அசத்தும் தசாவதாரம் படத்திற்காக 1,000 பிரிண்டுகளைப் போட தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார்.
சிவாஜி அலை அடங்கிப் போய் விட்ட நிலையில் அடுத்து தசாவதாரம் ஆரவாரத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக கமல்ஹாசன் இப்படத்தில் 10 வேடங்களில் நடிக்கிறார்.அவர் படத்தில் போட்டுள்ள வேடங்கள் குறித்து தினசரி ஒரு புளகாங்கித செய்தி வந்தவண்ணம் உள்ளது. அதேபோல படத்தின் பட்ஜெட் குறித்தும் பலப்பல செய்திகள் வந்து கொண்டுள்ளன.
முதலில் ரூ. 50 கோடி பட்ஜெட் என்று செய்திகள் கூறின. பின்னர் ரூ. 75 கோடி என்று இன்னொரு செய்தி கூறியது. உண்மையான பட்ஜெட் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் சிவாஜியைப் போலவே, தசாவதாரமும் மாபெரும் பட்ஜெட் படம் என்பது உறுதியாகத் தெரிகிறது.
படத்தை தீபாவளிக்கு வெளியிட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆர்வமாக உள்ளார். ஆனால் வியாபாரத்தை சிறப்பாக செய்வதற்கு வசதியாக நவம்பர் இறுதிக்கு ரிலீஸை ஒத்திப் போட தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளாராம்.
சமீபத்தில் படத்தின் டபுள் பாசிட்டிவை சில பத்திரிக்கையாளர்களுக்குப் போட்டுக் காட்டி அவர்களின் ஆலோசனையைப் பெற்றாராம் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.
இதுகுறித்து படத்தைப் பார்த்த ஒரு செய்தியாளர் கூறுகையில், கமல்ஹாசனின் பத்து வேடங்களில் ஒரு வேடம் சாதாரண கமல். மற்ற 9 வேடங்களிலும் அடையாளமே காண முடியாத அளவுக்கு அசத்தியுள்ளார் கமல். அத்தனை கெட்டப்களும் அருமையாக வந்துள்ளன. சினிமா வரலாற்றில் தசாவதாரம் பெரும் புரட்சி படைக்கும், சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்றார்.
இதற்கிடையே, சிவாஜி ஸ்டைலில் தசாவதாரத்தை வெளியிட ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தசாவதாரம் வெளியாகிறது. இதற்காக 900 முதல் 1,000 பிரிண்டுகள் வரை போடப் போகிறார்களாம். அதேபோல வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவுள்ள 300 பிரிண்டுகளும், ஆங்கில சப் டைட்டிலுடன் போகவுள்ளதாம்.
கமலின் கலை அலை கரை கடந்தும் பரவட்டும்..


Click it and Unblock the Notifications











