'மூச்சுத் திணற வைக்கும்' சென்சார் போர்டுக்கு எதிரான போராட்டம் தொடரும்! - கமல் ஹாஸன்
சென்னை: என் படைப்புச் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்ட சென்சார் போர்டை எதிர்த்து என் போராட்டம் தொடரும் என்று நடிகர் கமல் ஹாஸன் கூறியுள்ளார்.
சென்சார் எனும் தணிக்கைக் குழுவுக்கு ஆரம்பத்திலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் கமல்.
படைப்பாளிகளை சுதந்திரமாக இயங்கவிடாமல் தடுக்கிறது அந்த அமைப்பு என்பது கமலின் வாதம்.

மீண்டும்
மீண்டும் ஒரு முறை தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளதோடு, இந்த அமைப்புக்கு எதிரான தன் போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

என் சுதந்திரம்
இதுகுறித்து பேட்டியொன்றில், "எனது சுதந்திரத்தையும், என் படைப்பு சுதந்திரதையும் தடுக்கும் சென்சார் வாரியத்தின் செயல்பாடு என்னை சுதந்திரமாக சுவாசிக்க விடாமல், மூச்சுத் திணறலுக்குள்ளாக்குவது போல் தோன்றுகின்றது.

அவங்க என்ன செய்வாங்க?
தணிக்கைக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் சில அதிகாரிகளிடம் நான் இதுபற்றிப் பேசியுள்ளேன்.
அவர்களுக்கும், சினிமா தொழிலை அழிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. அவர்கள் அனைவரும் சினிமாவை நேசிப்பவர்கள்தான். எனினும், சட்டதிட்டங்களை உள்ளடக்கி, அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரையறைகளை அடிப்படையாக வைத்து, அந்த வரம்புக்குள் இருந்து தங்களது வேலையை அவர்கள் செய்து வருகின்றனர்.

தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக அல்ல
சென்சார் வாரியத்துக்கு எதிரான எனது போராட்டம் அதில் இருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. சென்சார் வாரியம் எனது சுதந்திரத்தையும், கருத்துரிமையையும் ஒடுக்குகின்றது என்று நான் கூறினால் அந்த கருத்து மத்திய சென்சார் வாரிய தலைவர் பஹ்லாஜ் நிஹலானி மற்றும் இதர அதிகாரிகளுக்கு எதிரான கருத்து அல்ல. அவர்கள் எல்லோருமே எனது நண்பர்கள்.

வெற்றி பெறுவோம்
ஆனால், இந்தப் போராட்டமானது, சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடைபெற்றுவரும் நெடு நாளையப் போராட்டமாகும். இதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்,' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











