ரஜினியுடன் இணைந்து நடிப்பதை தவிர்ப்பது இந்தக் காரணத்தினால் தான்- கமல்ஹாசன்
சென்னை: நானும், ரஜினியும் சேர்ந்து நடித்தால் படமெடுக்கப் பணம் இருக்காது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரஜினியும், கமலும் திகழ்கின்றனர். ரஜினி கமர்ஷியல் படங்களில் பயணித்து வருகிறார்.
கமல்ஹாசன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ரஜினியுடன்
நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, 16 வயதினிலே, தில்லு முல்லு போன்ற ஏராளமான படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதற்குப் பின் தனித்தனி பாதைகளில் இருவரும் பயணம் செய்ய ஆரம்பித்தனர்.
இன்றுவரை இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை.

ஷங்கர்
2ஓ படத்தில் ரஜினிக்கு வில்லனாக கமலை நடிக்க வைக்க, ஷங்கர் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. ஆமிர்கான், அர்னால்டு என்று பலரின் பெயரும் அடிபட்டு தற்போது அக்ஷய்குமார் அப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

ஹென்றி லாங்லாயிஸ்
பாரீஸ் நகரில் நடைபெற்ற விழாவில், இந்திய திரையுலகிற்கு சிறப்பான பங்களிப்பு செய்தமைக்காக கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் "ஹென்றி லாங்லாயிஸ்" திரைப்பட விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெரும் முதல் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. விருது வாங்கிய பின் பாரிஸ் நாட்டு பத்திரிக்கை ஒன்றிற்கு கமல்ஹாசன் விரிவான பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதிலிருந்து முக்கியமான சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

நானும், ரஜினியும்
"நானும், ரஜினியும் சம்பளம் வாங்கிக்கொண்டு இணைந்து நடித்தால், படமெடுக்கப் பணம் இருக்காது. அந்த ஒரு காரணத்தினால் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வருகிறோம். மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் காலம் வரும்போது கண்டிப்பாக சேர்ந்து பணியாற்றுவோம்.

மருதநாயகம்
என்னுடைய கனவுப்படமான மருதநாயகத்தை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருகிறார்கள். மேலும் அதுகுறித்து பேசுவதும் தற்போது அதிகரித்து விட்டது. ஆனால் இவ்வளவு நாள் பொறுமையாக காத்திருந்த எனக்கு, இன்னும் சற்று பொறுமை காப்பது பெரிய விஷயமல்ல. என்னுடைய அடுத்த படத்தில் மகள் ஸ்ருதியுடன் இணைந்து நடிக்கிறேன். நகைச்சுவை கலந்த திரில்லர் பாணியில் இப்படம் உருவாகி வருகிறது" இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











