சிவாஜிக்கு நான் வசனம் சொல்லிக் கொடுத்தபோது...! - கமலின் ப்ளாஷ்பேக்
சிவாஜிக்கு தேவர் மகன் படத்தில் தான் வசனம் சொல்லிக் கொடுத்த சம்பவத்தை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார் நடிகர் கமல் ஹாஸன்.
வாகா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவர் பேசுகையில், "தேவர் மகன் படத்தில், ‘விதை நான் போட்டது' என்று சிவாஜி சொல்வார். அந்த விதைகளில் ஒன்றுதான் நான். சின்ன வயதில் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரையும் நான் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்...அவர் கள் மடியில் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நிலை இருந்தது.

எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் மிகப்பெரிய சாதனையாளர்கள், மிகப்பெரிய நடிகர்கள் என்பது அப்போது எனக்கு தெரியாது. போக் ரோடு வழியாக போகும்போது, நடிகர் திலகத்தின் ‘அன்னை இல்லம்' வீட்டை வேடிக்கை பார்த்தவர்களில் நானும் ஒருவன். இந்த வீட்டுக்குள் போக முடியுமா? என்று ஏங்கியிருக்கிறேன்.
பிறகு அதே வீட்டில் எனக்கு அன்பும், ஆதரவும் கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். அந்த வீட்டின் மூத்த மகன், நான். சிவாஜி ரசிகர்கள் கம்பீரமாகத்தான் நடப்பார்கள். அவருடைய மகன் பிரபுவும், பேரன் விக்ரம் பிரபுவும் இவ்வளவு பணிவாக இருப்பதை எண்ணி வியக்கிறேன். என் மகள் சுருதிக்கு விக்ரம் பிரபுவை காட்டி அறிவுரை சொல்ல நினைக்கிறேன்.
3 தலைமுறை நடிகர்களை உருவாக்கி இருக்கிறது, எங்கள் குடும்பம். நான் ஆசைப்பட்டபடியே ‘தேவர் மகன்' படத்தில் நடிகர் திலகத்துடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் நடித்தது, என் பாக்கியம். அந்த படத்தில் நடித்தபோது, அவருக்கு எப்படி வசனம் சொல்லிக் கொடுப்பது? என்று தயங்கினேன். ஒரு நல்ல வசனம் எழுதி விட்டால், உடனே அவர் பாராட்டுவார்.
இங்கே பேசிய மகேந்திரன் என்னால்தான் அவர் இயக்குநரானதாகச் சொன்னார். அது ரொம்பத் தப்பு. அவர் திறமை அபாரம். அதை நாங்கள் அறிவோம். மண்ணுக்குள்ளே அழுத்தி வைத்திருந்தாலும் கூட வேகமாய் முளைத்திருப்பார். அப்படி ஒரு ஆளுமை அவர்.
இது, என் குடும்ப விழா. இந்த விழாவுக்கு என்னை அழைக்காமல் விட்டு விடாதீர்கள் என்றேன். நான் வெளிநாட்டில் இருந்திருந்தால், ‘ஸ்கைப்' வழியாகவேனும் வாழ்த்தி இருப்பேன்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











