கடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்!
என்னமோ சொல்ல வர்றார்... அது என்னன்னுதான் தெரியல... ப்ரோ, உங்களுக்குப் புரிதா? என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொள்ள வைத்துள்ளது கமல் ஹாஸனின் அரசியல் ட்வீட்கள்.
சாமானியர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடுமையான தமிழ் நடை, புரியாத வாக்கியங்கள், சமயத்தில் கடும் எழுத்துப் பிழைகளுடன் அவரது ட்வீட்கள் வருகின்றன.

அரசை எதிர்க்கிறார்... ஓகே. ஆனால் அடுத்து அவர் இலக்கு என்ன? அரசியலுக்கு வருகிறாரா? கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கப் போகிறாரா? அல்லது வேறு கட்சியில் சேர்ந்து அரசுக்கு எதிராக போராடப் போகிறாரா? எந்தத் தெளிவும் இல்லை அவரது ட்விட்டர் பதிவுகளில்.
நேற்று அவர் தொடர்ச்சியாக வெளியிட்ட ட்விட்கள் இவை:
"அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்"
உடனே இந்த ட்விட்டுக்கு தெளிவுரை, பதவுரை என பல உரைகளை இணையத்தில் எழுதிக் குவித்துவிட்டனர் வலைவாசிகள். விளி-ன்னா என்னவா இருக்கும் என இருக்கிற முடியைப் பிய்த்துக் கொண்டனர்.

அதற்கு அடுத்து கமல் எழுதிய கவிதை 'அடேங்கப்படிக்கப்பா' ரகம். அதுவும் ஆங்கிலப் பத்திரிகையில் நாளை அறிவிப்பு வரும் என்று வேறு போட்டிருந்தார். அதாவது இன்று அறிவிப்பு வந்திருக்க வேண்டும். ஆங்கிலப் பத்திரிகை வந்துவிட்டது... ஆனால் சேதி எதுவும் வரவில்லை. கபடிப் போட்டிக்கு தூதராக அவரை நியமித்துள்ள ஆங்கில அறிக்கைதான் வந்திருக்கிறது.
ஆண்டவா.. சொல்வதை எளிய தமிழில் எல்லாருக்கும் புரியும்படி சொல்லிடுங்க. பாவம் ஜனங்க!


Click it and Unblock the Notifications











