மொபைல் போன் வைத்திருந்தால் எதைவேண்டுமானாலும் எடுப்பதா? நியூசென்ஸ்...! - கமல் காட்டம்
ஒரு மொபைல் போன் கையில் இருந்துவிட்டால் எதையும் படமெடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாக நினைப்பது தவறு என்று கண்டித்துள்ளார் கமல் ஹாஸன்.
பாபநாசம் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, "பாபநாசம் திரைப்படம் அனுமதி இல்லாமல் மொபைலில் படம் எடுப்பதைப் பற்றி பேசுகிறது. இதைப்பற்றி தங்கள் கருத்து என்ன?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கமல், "ஒரு மொபைல் போன் கையில் இருந்துவிட்டால், எதையும் படம் எடுக்கக் கூடிய உரிமை தனக்கு இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். அருகில் வந்து நின்று ஃபோட்டோ எடுத்துவிட்டுத்தான், ஃபோட்டோ எடுத்துக்கலாமா என்றே கேட்கிறார்கள். அதுவும் ஒரு நடிகனாக இதை நான் அதிகமாக அனுபவிக்கிறேன். இது மிகவும் தவறானது. என் அனுமதியின்றி எனது அந்தரங்கத்தில் நுழைவதற்கு அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது?
இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. மொபைல் கம்பெனிக்காரன் விளம்பரத்திலேயே மிகப்பெரிய நியூசென்ஸ் செய்கிறான். ஒருவன் ஒருத்தியை ஃபோட்டோ எடுக்கிறான். அவள் உடனேயே அவனிடம் மயங்கி காதலில் விழுகிறாள். இதை என்ன சொல்வது," என்றார்.


Click it and Unblock the Notifications











