உங்கள் அன்பால் சீக்கிரம் குணமாகி விட்டேன்... 'நாயுடு’ மூலம் அதை திருப்பித் தருவேன்: கமல் #kamal
சென்னை: நடிகர் கமல் வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் தனது பட வேலைகளைத் தொடங்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம். ரசிகர்களின் அன்பாலேயே தான் சீக்கிரம் குணமானதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கமல், தனது அன்பை சபாஷ் நாயுடு படம் மூலம் திருப்பித் தருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகிவரும் படம் "சபாஷ் நாயுடு". இப்படத்திற்கான பாதி படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்கான ஆயத்தங்கள் சென்னையில் தொடங்கிய தருணத்தில், கடந்த ஜூலை மாதம் கமலுக்கு திடீர் விபத்து ஏற்பட்டது.

மாடிப்படியில் தவறி விழுந்த அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர் ஓய்வில் இருந்த கமல், சமீபத்தில் வீட்டுக்குத் திரும்பினார். அதனைத் தொடர்ந்து விரைவில் மீண்டும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டது. எனவே, இம்மாதம் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நவம்பர் மாதவாக்கில் படப்பிடிப்புகளில் பங்கேற்பது உத்தமம் என டாக்டர்கள் அவருக்கு வலியுறுத்தியுள்ளார்களாம். இது தொடர்பாக கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நவம்பர் மாதம் முதல் நான் என் வேலைகளைத் தொடங்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உங்களின் அன்பால் நான் எனது காயம் சீக்கிரம் குணமானது. இதற்கு பதில் எனது அன்பை எனது புதிய படம் சபாஷ் நாயுடு மூலம் நான் திருப்பித் தருவேன்' என அவர் தெரிவித்துள்ளார்.
சபாஷ் நாயுடு படத்தில் கமலுடன் ஸ்ருதி, பிரம்மானந்தம், செளரப் சுக்லா மற்றும் ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











