பாலச்சந்தரின் நிழலாய் அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வேன்! - கமல்
இயக்குநர் பாலசந்தரின் நிழலாக இருந்து அவர் விட்டுச் சென்றுள்ள பணிகளைத் தொடர்வேன் என்று தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.
"ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல்', "திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படம் "உத்தம வில்லன்.'
கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.
இயக்குநர் பாலசந்தர் நடித்த கடைசிப் படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இணையதளம் மூலம் இசை வெளியீடு
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் படத்தின் பாடல்களை பதிவிறக்கம் செய்யும் இணையதள முகவரியை வெளியிட கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் மும்பையிலிருந்து அந்த முகவரியை பதிவிறக்கம் செய்து கொண்டார்.

ஒத்திகை
அதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் பேசியது:
இந்த நிகழ்ச்சி தயாராவதற்கு முன்பு பல முறை ஒத்திகை பார்த்து வந்தேன். ஆனால் இப்போது, பாலசந்தர் சார் பேசிய வார்த்தைகள் என்னை உணர்ச்சி வசப்பட வைத்துவிட்டது. அதனால் என்னால் பேசக் கூட முடியவில்லை. எனக்கும் அவருக்குமான உறவு 40 ஆண்டுகளைக் கடந்த உறவு.

மகா குரு
இது அவரைப் பற்றிய தாமதமான நினைவு கூரல் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு பல மேடைகளில் இதைப் பேசியிருக்கிறேன்.
இயக்குநர் பாலசந்தரால் என்னைப் போல் நிறைய பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் அவர் குருவாக இல்லாமல், மகா குருவாக இருந்திருக்கிறார்.

பெருமை
இந்தப் படத்தில் நீங்கள் நடியுங்கள் என அழைத்த போது மறுப்பு எதுவும் சொல்லாமல் அவர் நடிக்க வந்தது பெருமையான விஷயம். இது போன்ற ஒரு மேடையில் அவர் இருக்க மாட்டார் என்ற விஷயம் எனக்குத் தெரியாது. அதனால் பல தகவல்களை நான் சேகரிக்காமல் விட்டு விட்டேன்.

பாலச்சந்தரின் பாதி
இங்கே பேசிய பார்த்திபன், கே.பி.சாரின் பாதிதான் கமல் என்றார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். கர்வமாக இல்லாமல் உரிமையாக, கடமையாக ஏற்றுக் கொள்கிறேன். அந்த உரிமையையும், கடமையையும் அங்கீகரிக்கும் விதத்தில் அவரின் நிழலாக இருந்து அவரின் பணிகளைத் தொடருவேன்.

ரஜினி வெளியில் தெரிந்தார்
ரஜினியும், கமலும் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று சொன்னார்கள். ரஜினி கூட முரட்டுக் காளை போன்ற படங்களின் மூலம் ரஜினியாக வெளியே தெரிந்து இருப்பார்.

கேபி இல்லாமல் போயிருந்தால்...
ஆனால், பாலசந்தர் சார் மட்டும் இல்லையென்றால் இப்போது இருக்கிற கமல் வேறு ஒரு கமலாகத்தான் இருந்திருப்பேன். இந்த வாழ்க்கையை நன்றி மறவாமல் வாழ்வதே என்னுடைய முக்கியமான பணி," என்றார் கமல்ஹாசன்.


Click it and Unblock the Notifications











