அமெரிக்கா பறக்கும் சிவக்குமார், கார்த்தி
நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகனும், பருத்தி வீரன் நாயகனுமான கார்த்தி ஆகியோர் அமெரிக்கா செல்கின்றனர். அங்கு தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள தமிழர் சம்மேளனம் மற்றும் கரோலினா தமிழ் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஜூலை 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சிளில் சிவக்குமாரும், கார்த்தியும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர். திரையுலகில் தனது 40 ஆண்டு கால அனுபவங்களை அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளவுள்ளார் சிவக்குமார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை பல தரப்பட்ட நடிகர்களுடன் பழகிய பழுத்த அனுபவம் கொண்டவர் சிவக்குமார். பல்வேறு வகையான வேடங்களில் நடித்து தனக்கென தனி பாணியுடன் நடிப்பில் பரிமளித்தவர். இத்தனை கால அனுபவங்களில் தான் சந்தித்த சுவையான தருணங்களை அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் பகிர்ந்து கொள்ளவுள்ளார் சிவக்குமார்.
நடிகராக மட்டுமல்லாமல் நல்ல ஓவியராகவும் திகழும் சிவக்குமார் அந்த அனுபவங்களையும் கூறவுள்ளார். அதேபோல, நடிகர் கார்த்தியும் தனது பருத்தி வீரன் அனுபவத்தை பரிமாறிக் கொள்ளவுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில்தான் தனது எம்.எஸ். பொறியியல் படிப்பை முடித்தார் கார்த்தி. பின்னர் மணிரத்தினத்திடம் உதவியாளராகப் பணியாற்றினார். தற்போது அமீரால் நடிகராகியுள்ளார்.
ஜூலை 17ம் தேதி அமெரிக்கா செல்லும் தந்தையும், மகனும் ஜூலை 20ம் தேதி ஊர் திரும்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











