நான் போட்டுட்டேன்...அப்போ நீங்க...கார்த்திக்கு குவியும் பாராட்டுக்கள்...எதுக்குன்னு தெரியுமா ?
சென்னை : மக்கள் நலனுக்காக ஆன்லைனில் நடிகர் கார்த்தி முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்திற்கு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கார்த்தியின் சமூக அக்கறை அனைவரையும் கவர்ந்துள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்ற உள்ளது. இது குறித்து ஆன்லைனில் கையெழுத்து இயக்கம் ஒன்றை மத்திய அரசு துவங்கி உள்ளது.

ஆதரவு கேட்ட கார்த்தி
இந்த இயக்கத்தில் கையெழுத்திட்டுள்ள கார்த்தி, இதனை ட்விட்டரிலும் பகிர்ந்து, அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு இந்த கையெழுத்து இயக்கம் எதற்காக என்பது பற்றி விளக்கமாகவும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு
கார்த்தி தனது பதிவில், "உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதனால் அத்தகைய உணவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உணவுகளால் ஆபத்து
இப்படி மரபணு மாற்றப்பட்ட உணவுகள் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு, வளர்ச்சி தடைப்படுதல், உடலுறுப்பு சேதம், இனப்பெருக்க பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனுமதியில்லை
உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடியை ஏற்பதில்லை. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருந்தபோதிலும் இப்படியான உணவுப் பயிர்கள் சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானவை அல்ல என்பதால் இந்தியாவிலும் அவற்றைப் பயிரிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

கார்த்தியின் சந்தேகம்
பொதுமக்கள் மற்றும் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட வலுவான ஆதாரங்களின் காரணமாக Bt கத்திரிக்காய், GM கடுகு போன்றவை இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது விதிமுறைகளைத் தளர்த்துவதன் மூலம் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை நம் நாட்டுக்குள் அனுமதிப்பது ஏன் என்று புரியவில்லை.

கையெழுத்திடுவோம்
இப்படியான உணவுகள் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை அறிய எந்த மாதிரியான சோதனைகள் பின்பற்றப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. யார், எப்படி இதுகுறித்து முடிவெடுப்பார்கள் என்பது குறித்தும் எந்தக் குறிப்பும் இல்லை. எனவே மக்கள் நலனைக் காக்க, இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாதவர்களுக்காக, நாம் ஒன்றிணைவோம். இந்த மனுவில் கையெழுத்திடுவோம்" என கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

நல்ல தலைவர் கார்த்தி
கார்த்தியின் இந்த பதிவை பார்த்து விட்டு, கார்த்தி நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல தலைவரும் கூட என பாராட்டி உள்ளனர். கார்த்தியின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்களுடன் ஆதரவையும் தெரிவிப்பதாக பலர் குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











