தமிழ்நாடும் இந்தியாவில் தான் இருக்கிறது... நடிகர்கள் ஆவேசம்
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு விடியல் ஏற்பட வேண்டும் என்றும், போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இன்று உண்ணாவிரதம் இருந்து வரும் நடிகர், நடிகையர் தெரிவித்தனர்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்த், சரத்குமார், அஜீத் குமார், சூர்யா, கார்த்தி, சிவகுமார், சந்திரசேகர், சிபி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். தேவயாணி, கோவை சரளா உள்ளிட்ட பல நடிகைகளும் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதப் பந்தலுக்கு வெளியே நடிகர்களில் சிலர் இலங்கை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு,

நாசர்
இலங்கை தமிழர்களுக்காக உலக மக்கள் ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள். நடிகர் சங்கத்தினரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈழத் தமிழர்களின் கோரிக்கையான தனி ஈழம் எப்போதோ அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்ட பிறகும் அவர்களின் கோரிக்கை இன்னும் நிறைவேறாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இந்த எழுச்சி உலக மக்களின் காதுகளில் விழும். இனியாவது ஒரு விடிவு காலம் பிறக்கட்டும் என்று நாசர் தெரிவித்தார்.

விஷால்
இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு அவர்களின் மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் போர்க்குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

பிரகாஷ் ராஜ்
மனிதர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இலங்கையில் நடந்தது மோசமான செயலாகும். தமிழ் இனமே அழிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை கைவிட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு விடியல் பிறக்கட்டும். இலங்கை பிரச்சனை குறித்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை இந்த போராட்டம் தொடரும் என்றார் பிரகாஷ் ராஜ்.

ஜெயம் ரவி
இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க போராடுகிறோம். கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஜெயம் ரவி தெரிவித்தார்.

அதர்வா
ஈழத் தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்றார் அதர்வா.

ரமேஷ் கன்னா
இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் அமைய வேண்டும். மத்திய அரசு தமிழகம் இந்தியாவில் இருக்கிறது என்பதை உணர்ந்து தமிழர்களுக்கு உதவ வேண்டும். 30 ஓநாய்கள் சேர்ந்து புலியைக் கொன்றது பெரிய விஷயம் அல்ல. ஓநாய் எப்பொழுதும் ஓநாய் தான், புலி புலி தான் என்று ரமேஷ் கன்னா கூறினார்.

கோவை சரளா
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உரிமைக்காகத் தான் இந்த போராட்டம். ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்று நகைச்சுவை நடிகை கோவை சரளா தெரிவித்தார்.

பரத்
ஈழத் தமிழர்கள் நம் உடன்பிறப்புகள். அவர்கள் பாதிக்கப்படக் கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நடிகர் பரத் கூறினார்.


Click it and Unblock the Notifications











