'மக்கள் நலனுக்காகவே சட்டம்... நீதிமன்றம் இதைப் புரிந்து கொள்ளட்டும்' - சிவகுமார் ஆவேசம்!
சென்னை: மக்கள் நலனுக்காகவே சட்டம்... நீதிமன்றம் இதைப் புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு தடைச் சட்டத்தை உடனே நீக்க வேண்டும் என்று நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.
மேலும், வெளிநாட்டு மாடு இனத்தை இந்தியாவில் திணிக்கும் சதியே இந்த 'பீட்டா' சட்டம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து, பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து வருகிறது.
ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது, விளையாட்டின் இறுதியில், மாட்டின் முதுகில் கத்திகளைச் சொருகி, நாக்கை வெளியே தள்ளியவாறு, அந்த மாடு கீழே விழுந்து இறந்தபின், அதை எடுத்துச் சென்று உணவாக்குவது. தமிழ் நாட்டில் மாட்டை அப்படி யாராவது கொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? வெளிநாட்டு மாடு இனத்தை இந்தியாவில் திணிக்கும் சதியே இந்த 'பீட்டா' சட்டம்.
உண்மையிலேயே விலங்கினத்தைhd பாதுகாக்க இந்தச் சட்டம் இயற்றப்பட்டதென்றால், ஆங்கிலேயர் காலத்தில் துவங்கி, இன்றும், தினம் லட்சக்கணக்கான மாடுகளை, ஈவு இரக்கமின்றி கொன்று, அதன் இறைச்சிகளை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது, 'கோமாதா நம் குல மாதா'என்று பசுவைக் கும்பிடும் பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா ? பசு வதைத் தடைச் சட்டம் இதற்குப் பொருந்தாதா?
சீறும் சிங்கங்களாக தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுச்சியுடன் போராடுகிறார்கள்... மக்கள் நலனுக்காகவே சட்டம் . நீதிமன்றம் இதைப் புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும்!
-இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











