விளம்பரத்தில் நடித்த எங்களை சிக்க வைப்பதா? அனுமதி கொடுத்த அரசுதான் பொறுப்பு- ஆர்யா அதிரடி!
சென்னை: விளம்பரங்களில் நடிப்பதற்காக எங்களுக்கு தரப்படும் சம்பளத்துக்கு வருமான வரியும் கட்டி விடுகிறோம். எனவே உணவு பொருட்களின் தரம் பற்றிய பிரச்சினையில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. தரமான உணவு என சான்று அளித்த அரசுதான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும் என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.
மேகி நூடுல்ஸ் விளம்பரங்களில் நடித்த அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு பீகார் மாநிலத்தில் உள்ள முஸாபர்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் அமிதாப்பச்சன் உள்ளிட்ட ஐந்து பேரையும், கைது செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழ் நடிகர்கள்
தமிழக நடிகர்,நடிகைகள் பலர் விளம்பர படங்களில் நடித்து வருகின்றனர். விஷால், கார்த்தி, சூர்யா, ஆர்யா, சிம்பு, தனுஷ், சினேகா, பிரபு, தேவயாணி உள்ளிட்ட பலர் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்கள்.

சிவகார்த்திக்கேயன் மறுப்பு
சிவகார்த்திகேயனை குளிர்பான விளம்பரத்தில் நடிக்க ஒரு நிறுவனம் சமீபத்தில் அணுகியது. அவர் மறுத்து விட்டார். விளம்பர படங்களில் நடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி இருக்கின்றன.

ஆர்யா கருத்து
இதுகுறித்து கருத்து கூறியுள்ள நடிகர் ஆர்யா, ‘'இறக்குமதியாகும் உணவு பண்டங்கள் மற்றும் உள்நாட்டு உணவு பொருட்கள் அனைத்தும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த அமைப்பு சான்று அளித்த பிறகுதான் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. உணவு வகைகள் நுகர்வோர் சாப்பிட உகந்தது என அரசு சான்று அளித்த பிறகே அவற்றில் நாங்கள் நடிக்கிறோம்.

வரி கட்டுகிறோம்
விளம்பரங்களில் நடிப்பதற்காக எங்களுக்கு தரப்படும் சம்பளத்துக்கு வருமான வரியும் கட்டி விடுகிறோம். எனவே உணவு பொருட்களின் தரம் பற்றிய பிரச்சினையில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது.

அரசுதான் முழு பொறுப்பு
தரமான உணவு என சான்று அளித்த அரசுதான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும். கே.எப்.சி., பவுன்டன் டேவ் நிறுவனங்களுக்கு நான் விளம்பர தூதுவராக இருக்கிறேன். அவற்றை அடிக்கடி சாப்பிடவும் செய்கிறேன். எந்த பிரச்சினையும் இல்லை''என்று கூறியுள்ளார்.

நடிகர்களை நம்பித்தானே
வரி கட்டினால் சரியாகிவிடுமா ஆர்யா? நடிகர்கள் விளம்பரத்தில் நடிப்பதால்தானே மக்கள் நம்பி வாங்குகின்றனர். அதில் தவறு நடந்தால் நடிகர்கள் பொறுப்பாக முடியாதா? என்பது சமூக ஆர்வலர்கள் கேள்வியாகும்.


Click it and Unblock the Notifications











