சர்காரில் அரசியல் உள்நோக்கத்துடன் சர்ச்சை காட்சிகள்.. விஜய்க்கு அமைச்சர் எச்சரிக்கை
நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: சர்கார் படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டுள்ள சில காட்சிகளை நீக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியையொட்டி நேற்று ரிலீசானது. சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் கார்ப்பரேட் அதிகாரியான சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய். அமெரிக்காவில் இருந்து தமிழகம் வரும் அவர், இங்குள்ள அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு, அவரும் அரசியலில் குதிப்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பல பரபரப்பு சம்பவங்கள் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெல்லை கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதேபோல், அதிமுக அரசை விமர்சிக்கும் வகையிலான காட்சிகளும் அதிகமாக படத்தில் உள்ளன.
இந்நிலையில், இப்படத்திற்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், " அரசியல் உள்நோக்கத்துடன் சர்காரில் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்காரில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு சர்கார் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கதைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித்தான் சர்கார் நேற்று ரிலீசானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











