twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் - ரஜினிகாந்த்

    By Sudha
    |

    Rajini
    சென்னை: என்னை அரசியலுக்கு வர வேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கேட்டார். ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் என்று பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

    இந்தப் பேச்சின் மூலம் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்களுக்கு மீண்டும் அவர் பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

    ப.சிதம்பரம் ஒரு பார்வை என்ற பெயரில் நூல் வெளியிடப்பட்டது. இதை திமுக தலைவர் கருணாநிதி நேற்று நடந்த விழாவின்போது வெளியிட்டார். ப.சிதம்பரத்தின் தாயார் லட்சுமி அம்மாள் அதைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வழக்கம் போல அனைவரும் எதிர்பார்த்தது ரஜினி என்ன பேசப் போகிறார் என்பதைத்தான். அதேபோல ரஜினியும் தனது பேச்சில் பொடி வைத்துப் பேசத் தவறவில்லை.

    ரஜினியின் பேச்சிலிருந்து சில துளிகள்...

    பல ஆண்டுகளுக்கு முன் இதே அரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்துடன் நான் இங்கு மேடையில் ஏறினேன். அப்போது இவரை பற்றி 10 வரியில் பேச வேண்டும் என நினைத்தேன். 2 வரிதான் என்னால் பேச முடிந்தது. அப்போதே நினைத்துக் கொண்டேன். இந்த நிகழ்ச்சி இல்லை. இதே இடத்தில் இன்னொரு நிகழ்ச்சி வரும். அப்போது நிறைய பேசுவேன் என்று முடிவு எடுத்தேன். அதனால் இப்போது நிறைய பேசுகிறேன்.

    ப.சிதம்பரம் ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறந்த ஆற்றல் பெற்றவர். அவர் தமிழ் பேசும் போது ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார். ஆங்கிலம் பேசும் போது அதில் தமிழ் கலப்பு வராது. அந்த அளவுக்கு இரு மொழிகளிலும் சிறந்த ஆற்றல் பெற்றவர். இங்கே இப்போது நான் தமிழ் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பேச்சில் ஆங்கிலமும் வரும், தமிழும் வரும். அவரைப் போல் என்னால் பேச இயலாது.

    இன்று இவரை பற்றி வெளியிட்டுள்ள புத்தகத்தில் இவரை வாழ்த்தி தான் அதிகமாக கூறப்பட்டுள்ளது. இவரை பற்றிய விமர்சனங்கள் அடங்கிய புத்தகத்தை தொகுத்தால் ஆயிரம் கட்டுரைகளுக்கு மேல் வரும்.

    இவருடன் 1996ம் ஆண்டு நட்பு தொடங்கியது. அப்போது அரசியல் ஞானிகளாக திகழ்ந்த மூப்பனார், கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமான சிநேகம் ஏற்பட்டது. இவர்களின் நெருக்கத்தின் மூலம் நிறைய அரசியல் உண்மைகளை தெரிந்து கொண்டேன். அரசியலில் இவ்வளவு கஷ்டங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.

    1996ல் தமாகாவை மூப்பனார் உருவாக்கினார். அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை பெற பெரும் சிரமமான சூழல் இருந்தது. அந்த பொறுப்பை ப.சிதம்பரத்திடம், மூப்பனார் ஒப்படைத்தார். கஷ்டமான அந்த பொறுப்பை ஏற்று சிறப்புடன் செய்து காட்டினார். அந்த சமயத்தில் துக்ளக் சோ என்னிடத்தில் பேசி, தமிழகத்தின் நிலமையை எனக்கு உணர வைத்தார். அந்த காலகட்டத்தில் நான் தமாகா, திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருந்தேன்.

    அதன் பின்பு டெல்லியில் எனக்கு என்டிடிவி சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. அந்த விழாவில் நான் பங்கேற்பதாக இருந்தால் ப.சிதம்பரமும் தவறாமல் கலந்து கொள்வதாக கூறியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். எனக்காக ப.சிதம்பரம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த விருதை எனக்கு அளித்தார். மிகப்பெரிய பொறுப்பில் இருந்தபோதும் கூட எனக்காக ப.சிதம்பரம் வந்து விருது கொடுத்ததை நினைத்து பெருமை பட்டேன்.

    வேட்டி சட்டைகளே அவருக்கு எப்போதும் விருப்பம். அவருக்கு வேட்டி சட்டை பொறுத்தமாக உள்ளது. அவர் நிதியமைச்சராக மத்தியில் இருந்தார். அதன் பின் குஜ்ரால் அமைச்சரவை மத்தியில் ஏற்பட்ட போது ப.சிதம்பரம் எனது அமைச்சரவையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று குஜ்ரால் பேசினார். அந்த அளவுக்கு திறம்பட செயல்படுபவர். இவர் நிதியமைச்சராக இருக்கும் போது ஏழைகளை பணக்காரர்களாகவும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்காமல் இருக்கவும், பணக்காரர்களான ஏழைகளை மீண்டும் ஏழைகள் ஆக்காமல் இருக்கவும், நடுத்தர மக்களை மேலும் உயர்த்தவும் இவருக்கும் நன்கு தெரியும். அதனால் தான் மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகள் இவருக்கு கிடைக்கிறது. அந்த பொறுப்பில் இருப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது அவருக்கு தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது.

    பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் ராஜாவாக இருந்தாலும் 3 வட்டத்துக்குள் இருப்பார்கள். தங்களுக்கு என்று முதல் வட்டம் அவர்களுக்கான தனிவட்டம் அந்த வட்டத்துக்குள் மனைவி பிள்ளைகள் கூட வரமுடியாது. அவர்களையும் சேர்க்க மாட்டார்கள். 2வது வட்டம் இந்த வட்டத்துக்குள் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், ரத்த சம்பந்தபட்ட பந்தங்கள் ஆகியோர் அடங்கும்.

    அடுத்தது 3வது வட்டம். இந்த வட்டத்துக்குள் நண்பர்கள், நல்ல நெறியாளர்கள் எல்லோரும் இருப்பார்கள். 2ம் வட்டத்துக்குள் சொல்ல கூடாத விஷயங்களை எல்லாம் 3ம் வட்டத்தினரிடம் சொல்லி தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வார்கள். டெல்லியில் உள்ள பிரதமரிடம் 3ம் வட்டத்தில் இருப்பவர் ப.சிதம்பரம். அவருக்கு தெரியாமல் அங்கு எதுவும் நடந்து விடாது. அரசியல் ரகசியமாக இருந்தாலும் அது சிதம்பர ரகசியத்துக்குள் அடங்கும். அவருக்கு தெரியாமல் மத்திய அரசில் எதுவும் இருக்காது.

    இவருக்கு எப்போது குரல் கொடுப்பது என்பது நன்கு தெரியும். இவர் முழிக்காவிட்டால் ஆபத்து என்பது நன்கு தெரியும். இவர் விழித்துக் கொள்ளாவிட்டால் நாட்டில் புரட்சி நடந்து விடும் என்பதும் அவருக்கு தெரியும். எனக்கு அரசியல் அவ்வளவாக தெரியாது. அதனால் தான் அரசியலுக்கு வரக்கூடாது என்று இருக்கிறேன். ஆனால், யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது சிதம்பரத்துக்கு தெரியும். அரசியலுக்கு ஏன் நீங்கள் வரக்கூடாது என்று சிதம்பரம் கேட்பார். அப்படி வந்தால், என் வழி தனிவழியாகத்தான் இருக்கும். அந்த வழி அவருக்கு தெரியும் என்றார் அவர்.

    English summary
    Superstar Rajinikanth has once again fueled the talks of his entry into politics. He said in a functjon held in Chennai that, if he decides to enter into politics, it will be different.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X