28 ஆண்டுகளுக்குப் பிறகு ராம்கோபால் வர்மா படத்தில் அதிரடி போலீசாக நாகார்ஜுனா!
தெலுங்கில் 28 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படம் வெளியானது. படத்துக்கு தலைப்பு சிவா. தமிழில் அதே படம் உதயம் என்ற பெயரில் வெளியானது. இளையராஜா இசை. இரு மொழிகளிலுமே பாடல்கள் அத்தனையும் படு பிரபலம். ஹீரோ நாகார்ஜுனா, இயக்குநர் ராம்கோபால் வர்மா.
அதற்கு முன்பே பல வெற்றிப் படங்கள் தெலுங்கில் நடித்திருந்தாலும், சிவா படம் நாகார்ஜுனாவுக்கு இந்தியா முழுக்க பெயர் பெற்றுத் தந்தது. குறிப்பாக தமிழில் அடுத்தடுத்து இதயத்தைத் திருடாதே, உதயம் என ஹிட்டடிக்க ஆடிப் போனார்கள் இங்குள்ள ஹீரோக்கள்.

இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு பெரும் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. அந்த ஒரே படத்திலேயே அவர் பாலிவுட்டுக்கும் போய்விட்டார். அதன் பிறகு பல வெற்றி தோல்விகளைப் பார்த்தும்விட்டார். இப்போது சமூக வலைத் தளங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரபலமாகத் திகழ்கிறார்.
சிவா படம் வெளியாகி 28 ஆண்டுகள் (1989) ஆகிவிட்டன. இப்போது 5வது முறையாக இருவரும் இணைகிறார்கள். சிவா தவிர, துரோகி, கோவிந்தா கோவிந்தா, ஆந்தம், தி கிரேட் ராப்பரி ஆகிய படங்களில் இணைந்துள்ளனர்.
இப்போது 6வது முறையாக நாகார்ஜுனாவை இயக்குகிறார் ராம்கோபால் வர்மா. இதில் அதிரடி போலீசாக வருகிறார் நாகார்ஜுனா. இன்னும் தலைப்பிடாத இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர்களை வெளியிட்ட நாகார்ஜுனா, "28 ஆண்டுகளுக்கு முன் சிவா என்ற படம் வெளியாகி என் வாழ்க்கையையே மாற்றியது. இப்போது இன்னொரு படம். இந்தப் படத்தில் நடிப்பது பற்றிய என் உணர்வை விவரிக்க முடியவில்லை. படம் சிறப்பாக வர வாழ்த்துகளை மட்டும்தான் சொல்ல முடியும்," என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள ராம்கோபால் வர்மா, "நான் இனி பேசக் கூடாது. என் வேலைதான் பேசவேண்டும். முதல்முறையாக வாயை மூடிக் கொண்டு படம் பண்ணப் போகிறேன்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications