நரேனுக்கு நிச்சயதார்த்தம்
சித்திரம் பேசுதடி நாயகன் நரேனுக்கும், அவர் காதலித்து வந்த மஞ்சுவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடந்தது. 26ம் தேதி இவர்களின் கல்யாணம் நடைபெறவுள்ளது.
சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் மலையாளத்து நரேன். இப்படத்தைத் தொடர்ந்து கதை கேட்கிறேன் என்று ஏகப்பட்ட பந்தா விட்ட நரேன், தன்னைத் தேடி வந்த கதைகளை நிராகரித்து வந்தார்.பின்னர் ஒரு வழியாக நெஞ்சிருக்கும் வரை படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான பள்ளிக்கூடம் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கும், கோழிக்கோட்டைச் சேர்ந்த மஞ்சு என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இந்தக் காதலை பொத்திப் பொத்தி வைத்திருந்தார் நரேன்.
இரு வீட்டாரின் சம்மதமும் கிடைத்ததைத் தொடர்ந்து கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து கோழிக்கோட்டில் உள்ள மஞ்சுவின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர். கோழிக்கோட்டில் உள்ள சின்மயாஞ்சலி கலையரங்கில் வருகிற 26ம் தேதி காலை 10.30 மணிக்கு நரேன், மஞ்சு கல்யாணம் நடக்கவுள்ளது.
திருமணத்தை கேரளாவில் வைத்துள்ள நரேன், சென்னையிலும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். செப்டம்பர் 1ம் தேதி சென்னையில் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் வரவேற்பு நடக்கிறது.


Click it and Unblock the Notifications











