நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிறர் நிர்ணயிக்க முடியாது: மாட்டுக்கறி தடை பற்றி கமல் தடாலடி
சென்னை: கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தூங்காவனம்' படத்தின் பாடல்கள் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இதில், திரையுலகை சேர்ந்த பல்வேறு கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "‘தூங்காவனம்' படம் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மொழிகளிலும் எடுக்க வேண்டுமானால், படத்தில், ஒரு கார் சீன் வந்தாலும், அதற்கு நம்பர் பிளேட் மாற்றித்தான் மறுபடியும் சீன் வைக்கவேண்டும். அதேபோல், போலீஸ்காரர் வருகிறாரென்றால், தமிழுக்கு ஒரு சீருடை, தெலுங்குக்கு ஒரு யூனிபார்ம் என மாற்றி மாற்றிதான் எடுக்கவேண்டும்.
இந்த படத்தை நாங்கள் 52 நாட்களில் எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துதான் தொடங்கினோம். அதன்படி முடித்தோம். இருந்தாலும், கடைசி நேரத்தில் படத்திற்கு முக்கியமாக சில காட்சிகள் தேவைப்பட்டதால், மேலும் 8 நாட்கள் எடுத்துக்கொண்டோம். ஆக, மொத்தம் இந்த படம் 60 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நான் நடித்த ‘ராஜபார்வை' படத்தை 52 நாட்களுக்குள் எடுத்து முடித்தோம். என்றாலும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் இரண்டு மொழிகளில் ஒரு படத்தை இவ்வளவு சீக்கிரத்தில் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. இதற்கு படத்தில் பணிபுரிந்த அனைவரின் ஒத்துழைப்புதான் காரணம். அவர்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமாகாது என்றார்.
நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்கள் அவரிடம் மாட்டுக்கறி சாப்பிடுவதால் ஏற்பட்ட பிரச்சினையில் உ.பியில் ஒருவர் கொலையானது பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல் "நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை வேறு ஒருவர் நிர்ணயிக்க முடியாது. நான் முன்பு மாட்டுக்கறி சாப்பிடுவேன். இப்போது இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











