பொங்கலுக்கே தசாவதாரம்!
உலக நாயகன், கலைஞானி கமல்ஹாசன் பத்து அவதாரங்களில் தூள் பறத்தும் தசாவதாரம் இந்த ஆண்டுக்குள் ரிலீஸாகாதாம். பொங்கல் பண்டிகைக்குத்தான் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.
கடந்த ஆண்டு கமல் ரசிகர்களுக்கு சரியான வேட்டையாக அமைந்தது அவரும் ஜோதிகாவும் இணைந்த வேட்டையாடு விளையாடு. இந்த ஆண்டு கமல் படம் எதுவும் ரிலீஸாகவில்லை.அவர் முதல் முறையாக 10 வேடங்களில் நடித்து வரும் தசாவதாரம் ஜூன் 15ம் தேதி வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. அன்றைய தினம்தான் ரஜினியின் சிவாஜி ரிலீஸானது. ஆனால் படப்பிடிப்பு முடிவடையாததால், தசாவதாரம் தள்ளிப் போனது.
தீபாவளிக்கு நிச்சயம் வெளியாகி விடும் என்றார்கள். ஆனால் இப்போது இன்னும் தள்ளிப் போய் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் தசாவதாரம் திரைக்கு வருமாம்.
கமல்ஹாசன் உலகிலேயே முதல் முறையாக பத்து வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் படத்தைத் தயாரித்துள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக ஆசின், மல்லிகா ஷெராவத், ஜெயப்பிரதா, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தி இசைப் புயல் ஹிமேஷ் ரேஷமய்யா இசையமைத்துள்ளார். கமல்ஹாசன்தான் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார்.
தற்போது படத்தின் வசனக் காட்சிகளை முடிக்கும் தீவிரத்தில் தசாவதாரம் யூனிட் உள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள் இது முடிந்து விடுமாம். அதன் பிறகு வெளிநாட்டு லொகேஷனில் இரண்டு பாடல்களைப் படமாக்க வேண்டியுள்ளது. அதன் பிறகுதான் பெரிய வேலையே உள்ளது - அதாவது கிராபிக்ஸ்.
மிகப் பெரும் படமான இதை எந்த இயக்குநராலும் குறுகிய காலத்திற்குள் முடிக்க முடியாது. காரணம் கமல்ஹாசன் போட்டுள்ள வேடங்கள். இந்த வேடங்களுக்கான மேக்கப்பைப் போடவே பல மணி நேரம் ஆன காரணத்தால்தான் இத்தனை நிதானமாகவும், மெதுவாகவும் படப்பிடிப்புப் போய்க் கொண்டிருக்கிறது.
விருந்து விரைவாக ரெடியாகிக் கொண்டிருக்கிறது. நன்கு வெந்த பின்னர் சாப்பிட்டால்தான் வயிற்றுக்கும் நல்லது, சமைத்தவருக்கும் நல்ல பெயர். ஸோ, பொறுத்திருப்போம்!


Click it and Unblock the Notifications











