பருத்தி வீரன் - 275 (நாட் அவுட்)!

ஒரு புதுமுக நடிகரின் படம் சில்வர் ஜூப்ளியைக் கொண்டாடுவது தமிழ் திரைப்பட வரலாற்றில் நிச்சயம் அரிய விஷயம்தான். அந்த சாதனையை படைத்துள்ளார் கார்த்தி.
சூர்யாவின் தம்பி என்ற அறிமுகத்துடன் நடிக்க வந்த கார்த்தி, இப்போது பருத்தி வீரன் கார்த்தி என்ற சாதனை அடைமொழியைப் பெற்றுள்ளார்.
அமீரின் தெற்கத்தி கையால் குட்டுப்பட்ட கார்த்தி, பருத்தி வீரனில் படு இயல்பான தெற்கத்தி முரட்டுக் காளையாக நடித்து அசத்தியிருந்தார்.
பருத்தி வீரன் சென்னையில் 275 நாட்களைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இப்படம் பேபி ஆல்பட் தியேட்டரில் தொடர்ந்து 275வது நாட்களாக ஓடி கார்த்தியின் திரையுலக வரலாற்றில் பெரிய தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஒரு வருடம் இப்படத்ைத ஓட்ட பேபி ஆல்பட் தீர்மானித்திருப்பதாகவும் தெரிகிறது.
முதல் படமே சில்வர் ஜூப்ளியாகி விட்டதால் கார்த்தி படு சந்தோஷமாக உள்ளார். அதேசமயம், இந்த அமர்க்களமான ஆரம்பத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வதிலும் அவர் கவனமாக இருக்கிறார்.
பார்த்துப் பார்த்து படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கார்த்தி தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்திலும், லிங்குச்சாமியின் புதிய படத்திலும் நடிக்கிறார்.
கார்த்தியைப் பொருத்தவரை சம்பளம் முக்கியமல்ல, சரக்குடைய கதைதான் முக்கியம் என்கிறார்.
கலக்கிட்டப்பே, கார்த்தி!


Click it and Unblock the Notifications











