பசங்க 2 படத்திற்கு பேனர், கட் அவுட் வேண்டாம்... இது சூர்யாவின் வேண்டுகோள்
சென்னை: தனது நடிப்பில் வெளியாகவிருக்கும் பசங்க 2 படத்திற்கு பேனர், கட் அவுட் போன்றவை வேண்டாம். அதற்குப் பதிலாக மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சூர்யா நடிப்பில் வருகின்ற 24 ம் தேதி பசங்க 2 திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிந்து மாதவி, அமலாபால் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.

வழக்கமாக தங்களது அபிமான நடிகர்கள் நடிக்கின்ற படத்திற்கு ரசிகர்கள் கட் அவுட், பேனர் ஆகியவற்றை வைப்பார்கள். ஆனால் நடிகர் சூர்யா தனது படத்திற்கு இவை எதுவும் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது "சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களில் பலர் நேரிடையாக களத்தில் நின்றும் வெளியில் இருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். உங்களின் மனித நேயப் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
அன்பின் வெளிப்பாடாக எனக்காக நீங்கள் பேனர்கள் வைப்பதையோ, போஸ்டர்கள் ஒட்டுவதையோ என்றைக்கும் நான் விரும்பியதில்லை. இதை நான் உங்களிடம் பலமுறை நேரிடையாகவே சொல்லியிருக்கிறேன்.
வரும் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ள 'பசங்க 2' திரைப்படத்திற்கு தியேட்டர்களை அலங்கரிக்கும் வேலையைச் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட தலைமை மன்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். வீண் செலவுகளைத் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள்". என்று நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மேலும் இது தவிர வருகின்ற 20 ம்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் தான் தத்தெடுத்து இருக்கும் கிராமங்களில் உள்ள 600 பேருக்கு அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ முகாம் ஒன்றை சூர்யா நடத்தவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











