இந்தியா பாகிஸ்தான் போரை மையமாகக்கொண்டு உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரபாஸ்!
சென்னை : பாகுபலி இரண்டு பாகங்களும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில் பிரபாஸ் இப்பொழுது இந்திய அளவில் அனைவருக்கும் பரிச்சயமான முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
இப்பொழுது ராதேஷ்யாம் என்ற காவிய படத்தில் பூஜா ஹெக்டே உடன் இணைந்து நடித்து வரும் பிரபாஸ் அதன் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ளார் இந்த படம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ளது.
இந்த நிலையில் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணைந்து சலார் என்ற படத்தில் நடித்து வர இப்படம் இந்தியா பாகிஸ்தான் போரை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இரட்டை வேடத்தில்
அலட்டிக்கொள்ளாத ஸ்டைலிஷ் நடிப்பின் மூலம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் பிரபாஸ் இப்பொழுது இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார். மிர்ச்சி, பில்லா போன்ற திரைப்படங்கள் இவரை தென்னிந்திய ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆக்கிய நிலையில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்பு இவரை இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது. சரித்திர திரைப்படமாக வெளியான பாகுபலியில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்திருக்க இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகி இந்தியா மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகளில் ரிலீஸ் ஆனது. குறிப்பாக ஜப்பானில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.

மிகப்பெரிய பட்ஜெட்டில்
பாகுபலியைத் தொடர்ந்து சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் ஆக்சன் கதை களத்தில் நடித்த சாகோ எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் சம்பளம் மட்டும் படத்திற்கு படம் ஏறிக்கொண்டே செல்ல இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர்களின் பட்டியலில் 10ல் ஒருவராக முன்னேறியுள்ளார். இந்த நிலையில் ராதே கிருஷ்ணகுமார் இயக்கத்தில் காதல் காவியமாக ராதே ஷ்யாம் உருவாகிவருகிறது. இந்த முறையும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஹைதராபாத், இத்தாலி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஜூலை 30ஆம் தேதி வெளியாக இருந்த ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் சங்கராந்தி பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சலார்
பாகுபலி பிரமாண்டத்தை தொடர்ந்து கன்னட மொழியில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் பாகுபலியை போலவே தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். கேஜிஎஃப் முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இப்போது இரண்டாவது பாகமும் உருவாகி வருகிறது. கோலார் தங்கச் சுரங்கத்தை பற்றி பலரும் அறியாத தகவல்கள் இப்படத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் யஷ் மிரட்டலாக நடித்திருக்க இப்பொழுது இரண்டாவது பாகத்திலும் கதாநாயகனாக ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். அவரது கதாபாத்திரத்திற்கு ஆதிரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ள கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து சலார் என்ற ஆக்ஷன் படத்தை தொடங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிலையில் ஆந்திராவில் உள்ள காட்டுப் பகுதியில் பெரும்பாலான காட்சிகள் படம் எடுக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் பேனரில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார். தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகிறது. கன்னட நடிகர் மது குருசாமி பாசுக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்கிறார். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.
Recommended Video

இந்தியா பாகிஸ்தான் போரை
அதிரடியான சண்டை படமாக உருவாகி வரும் சலார் எந்த மாதிரியான கதை களத்தில் உருவாகிறது என்பது பற்றிய எந்த ஒரு செய்தியும் இதுவரை படக்குழு வெளியிடாத நிலையில் தற்போது சுவாரசியமான செய்தி ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. அதாவது சலார் ஒரு பீரியாடிக் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக 1970 பின்னணியில் இப்படத்தின் கதை நடக்கிறது. அதன்படி 1971இல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது. இந்தியா பாகிஸ்தானை மையப்படுத்தி பல திரைப்படங்கள் இன்றளவும் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற வரலாற்றில் மறக்க முடியாத போரை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருவதால் இந்திய ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படமாக சலார் உருவாக இருப்பதால் இதுவரை இருந்த அனைத்து வசூல் சாதனைகளையும் இப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சலார் வெளியானால் இந்திய சினிமாவில் அனைவரும் மறக்கமுடியாத மிகச்சிறந்த தேசியப் பற்று மிகுந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு இப்படம் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











