அலைபாயுதே “மேடி”க்கு 45 வயசாச்சு.... இன்று பிறந்த நாள்!
சென்னை: தமிழ் சினிமாவில் பெண்களை அதிகம் கவர்ந்த மேடி மாதவன் பிறந்த நாள் இன்று.
1970 ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி ரங்கநாதன்- சரோஜா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த மாதவன் இன்று தனது 45வது பிறந்த தினத்தில் அடியெடுத்து வைக்கிறார். ஜாம்செட்பூரில் தமிழ் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த மாதவன் எல்லோரையும் போல கல்லூரி சென்று படித்து எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பட்டம் வாங்கியவர்.
படிக்கும் போதே தனது திறமைகளின் மூலம் இங்கிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு கல்லூரி சார்பாக சென்று வந்திருக்கிறார், 1996 ம் வருடம் மும்பையில் சந்தோஷ் சிவனின் விளம்பர நிறுவனத்தில் அவருக்கு உதவியாளராக வேலை செய்து கொண்டிருந்தார். நமது தமிழ் இயக்குனர் மணிரத்னம் தனது இருவர் படத்துக்கு நடிகர்கள் தேடிக் கொண்டிருக்க சந்தோஷ் சிவன் மாதவனை மணிரத்னத்திடம் அறிமுகம் செய்து வைத்தார்.
25 வயதில் மிகவும் இளைஞனாகத் தெரிந்த மாதவன் தனது படத்துக்கு சரியாக இருக்க மாட்டார் என்று அவரை நிராகரித்து விட்டார், மாதவன் டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து புகழ் பெறத் தொடங்கியதும் 1996 ம் வருடம் இஸ் ராக் ஹி சுபா நாகின் என்ற ஹிந்திப் படத்தில் முதல்முறையாக நடிக்க ஆரம்பித்தார் தொடர்ந்து இன்பிர்னோ (ஆங்கிலம்) மற்றும் சாந்தி சாந்தி சாந்தி (கன்னடம்) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மெல்ல திரையுலகில் கால்தடம் பதிக்க ஆரம்பித்தார்.

அலைபாயுதே
முதல்முறை மாதவனை நிராகரித்த மணிரத்னம் இந்த முறை மாதவனைத் தேடிச் சென்று அலைபாயுதே கதையைக் கூறி அந்தப் படத்தில் மாதவனை நடிக்க வைத்தார், திருமணம் செய்து கொண்டு வெளியே சொல்லாமல் பெற்றோருடன் வாழும் அந்த இளம்ஜோடியின் கதையை துணிச்சலாகக் கூறியதாக தமிழ்த் திரையுலகம் மணியையும் படத்தையும் கொண்டாட ஆரம்பித்தது. இன்றுவரை அலைபாயுதே மேடி என்று தான் மாதவனைக் கூறுகின்றனர், மணிரத்னமே நினைத்தாலும் இன்னொரு அலைபாயுதேவை அவரால் கொடுக்க முடியாது அந்த மாதிரி ஒரு காதல் கதையாக அமைந்துவிட்டது அலைபாயுதே.

ஒரே படத்தில் உச்சம்
அலைபாயுதே கொடுத்த பெயர் புகழ் எல்லாமே மாதவன் கனவிலும் எதிர்பாராதது, ஒரே படத்தின் மூலம் இளம்பெண்களின் கனவுனாயகனாக மாறிவிட்டார், தொடர்ந்து இவர் நடித்த மின்னலே, டும் டும் டும் போன்ற படங்களும் காதலை மையப் படுத்தியே அமைந்ததால் தமிழ் சினிமாவின் காதல் நாயகனாக வலம்வர ஆரம்பித்தவர்.

கன்னத்தில் முத்தமிட்டால்
மீண்டும் மணிரத்னம் படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்த படம்தான் கன்னத்தில் முத்தமிட்டால் இலங்கைத் தமிழர்களின் புலம் பெயரும் வாழ்வை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம் இது, பார்த்திபன் மகள் கீர்த்தனா மாதவன் மற்றும் சிம்ரனின் மகளாக நடித்து இந்தப் படத்திற்காக தேசிய விருது வாங்கினார் கீர்த்தனா .மொத்தம் ஆறு தேசிய விருதுகளை வென்ற படம் இது.

ஆயுத எழுத்து
தமிழ் சினிமாவில் மாதவனைக் காதல் நாயகனாகக் காட்டிய மணி தனது ஆயுத எழுத்து படத்தின் மூலம் அவரை ஒரு முரடனாக மாற்றிக் காட்டினார், மூன்று நாயகர்களில் ஒருவராக (சூர்யா ,சித்தார்த்) இந்தப் படத்தில் நடித்த மாதவன் மொட்டையடித்து தனது தோற்றத்தையே மாற்றி நடித்த படம் இது.

50 வது படம்
தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படம் மாதவனின் 50 வது படமாக அமைந்திருக்கிறது, சமீபத்தில் வெளியான இந்தப்படம் அதிரி புதிரியாக ஓடி வசூலைக் குவிப்பதால் இந்தப் பிறந்த நாள் மாதவனுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக அமைந்திருக்கிறது.

நடித்ததில் மிகச் சிறந்த படங்கள்
கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், வாழ்த்துக்கள் (முழுவதும் தமிழில் உரையாடல் அமைந்த முதல் படம்) தம்பி மற்றும் பிரியமான தோழி (நட்புக்கு இலக்கணம் வகுத்த படம்) போன்ற படங்கள் மாதவனின் திரைவாழ்வில் நிச்சயம் சொல்லிக் கொல்லும் படங்களாக இருக்கும்.

வாங்கிய விருதுகள்
இதுவரை மூன்று முறை தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதை வாங்கியிருக்கிறார் ரன், அன்பே சிவம் மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால். இவர் நடித்த படங்களில் சிறந்த 5 படங்களை வரிசைப் படுத்தினால் அது கண்டிப்பாக இந்த 5 படங்களாகத் தான் இருக்கும் அலைபாயுதே, மின்னலே, அன்பே சிவம், யாவரும் நலம் மற்றும் ஆயுத எழுத்து.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடி........


Click it and Unblock the Notifications











