சினிமாவால் வந்த ‘கெட்ட’ப் பழக்கம்.. இனி அதையும் விட்டு விடுவதாக லாரன்ஸ் உறுதி
விருது வாங்கிய கையோடு மதுப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
சென்னை: சினிமாவிற்கு வந்த பிறகு தனக்கு ஒயின் அருந்தும் பழக்கம் வந்ததாகவும், இனி அதனையும் அருந்தப் போவதில்லை என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
அன்னை தெரசாவின் 108-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை காமராஜர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.
மதர் தெரசா சாரிட்டபிள் டிரெஸ்ட் சார்பில் நடந்த இந்த விழாவில் மிகச் சிறந்த சமூக சேவைக்கான விருது திரைப்பட நடிகர், இயக்குனர் ராகவா லாரன்சுக்கு வழங்கப்பட்டது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேராயர் எஸ்றா சற்குணம், குமரி அனந்தன், ராகவா லாரன்ஸ் தாயார் கண்மணி, மவுலானா இலியாஸ் ரியாஸ், முன்னாள் நீதிபதி பால் வசந்தகுமார், ரூபி மனோகரன், எல்.ஐ.சி. ஆர்.தாமோதரன், முன்னாள் போலீஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் ராகவா லாரன்ஸ் பேசியதாவது:-

அம்மா:
இந்த உலகத்தில் உள்ள முதல் கடவுளாக தாயைத் தான் நான் நினைக்கிறேன். நாங்கள் ராயபுரத்தில் இருந்த போது எனக்கு 10 வயது. அப்போது நான் ‘பிரெயின் டியூமர்' நோயால் பாதிக்கப்பட்டு இருந்தேன். பேருந்துக்குக் கூட காசு இல்லாத நிலையில் என்னை எனது அம்மா, தோளில் சுமந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அன்று என்னை அம்மா நம்பிக்கையோடு காப்பாற்றவில்லை என்றால், இன்று நான் இல்லை.

காணிக்கை:
எனவே இந்த விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன். நான் இந்த அளவு உயர்வதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். முதலில் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர், எனக்கு கார்துடைக்கும் வேலை கொடுத்து ஆதரவு அளித்தார். அங்கு என்னைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார், எனக்கு கடிதம் கொடுத்து நான் டான்ஸ் மாஸ்டர் ஆக உதவி செய்தார்.

பட்டியல்:
அமர்க்களம் படத்தின் மூலம் நடிகராகி இன்று இயக்குனர், தயாரிப்பாளர் என்று உருவாக எத்தனையோ பேர் உதவி இருக்கிறார்கள். குறிப்பாக சூப்பர் சுப்பராயன், ரஜினிசார், விஜய், அஜீத், சிரஞ்சீவி, இயக்குனர் சரண், என்னை இயக்குனராக அறிமுகம் செய்த நாகார்ஜூனா சார் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

வறுமை:
ராயபுரத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்து நானும், 3 சகோதரிகளும் எப்படியெல்லாம் வறுமையை அனுபவித்தோம் என்று சொல்லிமாளாது. பொறுமையாக வளர்ந்து நான் சம்பாதிப்பதை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொடுக்கிறேன். மக்கள் திலகத்தின் ‘தர்மம் தலைகாக்கும்', பாடலையும், மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான்' என்ற ரஜினி சார் பாடலையும் மனதில் வைத்துக் கொண்டு உதவி செய்து வருகிறேன்.

நன்றிக்கடன்:
சாதாரணமாக இருந்த என்னை இந்த அளவுக்கு உயர்த்திய மக்கள் தந்த பணத்தை நான் திருப்பிக் கொடுக்கிறேன். பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் போகும் போது எடுத்துக் கொண்டு போவது இல்லை. அதை மனதில் வைத்து இனி அன்னை தெரசா வழியில் செயல்பட முடிவு செய்துள்ளேன்.

மதுப்பழக்கம்:
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு சிகரெட், மது என்று எந்த பழக்கமும் இல்லை. நடன கலைஞர் ஆனபின், நண்பர்களின் வற்புறுத்தலுக்காக, எப்போதாவது ஒருமுறை குடிப்பேன். அதையும் இப்போது நிறுத்தி விட்டேன்.

முடிவு:
ரொம்ப ‘டென்ஷன்' ஆக இருந்தால், கொஞ்சம் ஒயின் அருந்துவேன். இப்போது, அன்னை தெரசா விருது பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு மரியாதை கொடுக்க, இனி ஒயின் கூட அருந்துவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன்'' என இவ்வாறு அவர் பேசினார்.


Click it and Unblock the Notifications











