ரஜினி ரசிகர்களின் கேசட் தானம்!
ரஜினிகாந்த்தின் சிவாஜி பட கேசட்டுகளை பஸ் டிரைவர்களுக்கு இலவசமாக வழங்கி தங்களது தலைவரின் பாடல்களை ஒலிக்கச் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
சிவாஜி பட பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி விட்டன. எங்கு பார்த்தாலும் சிவாஜி பட பாட்டாகவே இருக்கிறது. இந்த நிலையில் தங்களது தலைவரின் பாடல்களை மேலும் பிரபலப்படுத்த முடிவு செய்த சிவகாசி நகர ரஜினி ரசிகர்கள் வித்தியாசமான ஐடியாவை அமல்படுத்தியுள்ளனர்.கை நிறைய கேசட்டுகளுடன் பேருந்து நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்த பேருந்துகளில் ஏறி, டிரைவர்களுக்கு கேசட்டுகளை இலவசமாக வழங்கி அண்ணே, மறக்காம தலைவர் பாட்டை ஒலிக்க விட்டபடியே வண்டியை ஓட்டுங்கள் என்று அன்பொழுக கேட்டுக் கொண்டனர்.
அதேபோல, கண்டக்டர்களுக்கும் ஒரு பிரதியைக் கொடுத்தனர். கூடவே, அண்ணே, தலைவரும் உங்க இனம்தான், மறக்காம நீங்களும் தலைவர் பாட்டையே கேளுங்க என்று கேட்டுக் கொண்டனர்.
ரசிகர்களின் இந்த கேசட் தானத்தால் சந்தோஷமாகிப் போன டிரைவர்களும், கண்டக்டர்களும், வீட்டுக்கும் ஒரு காப்பி கொடுங்கப்பா என்று உரிமையோடு கேட்டு வாங்கிச் சென்றனர்.
இதனால் சிவகாசி பேருந்து நிலையத்தில் உள்ள பல பேருந்துகளில் ஒரே நேரத்தில் சிவாஜி பட பாடல்கள் ஒலித்ததால் பொதுமக்கள் லேசாக மிரண்டு போனார்கள்.
இப்படிப்பட்ட தொண்டர்கள் இருக்கும் வரை தலைவருக்கு கவலை ஏது?


Click it and Unblock the Notifications











