முடிந்தது சிவாஜி-இமயமலை கிளம்பினார் ரஜினி
சிவாஜி படம் சம்பந்தமான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதால் ஓய்வுக்காக இமயமலைக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார் ரஜினிகாந்த்.
கடந்த ஒன்றரை வருடங்களாக சிவாஜி படத்தில் நடித்து வந்தார் ரஜினி. சக்கையாக ஷங்கர் பிழிந்தெடுத்த போதிலும் கூட சற்றும் சளைக்காமல், சலிக்காமல் நடித்துக் கொடுத்தார் ரஜினி.படம் பக்காவாக ரெடியாகி விட்டது. பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆகி விட்டது. மே 17ம் தேதி திரைக்கு வருகிறார் சிவாஜி.
இந்த நிலையில், தனது வருடாந்திர இமயமலை பயணத்தை இன்று மேற்கொள்கிறார் ரஜினி. வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ரஜினி இமயத்திற்குச் செல்வார்.
அங்குள்ள பாபா கோவில் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சுதந்திரமாக சுற்றித் திரிந்து தியானம் செய்வது, வழிபாடுகளில் ஈடுபடுவது ரஜினியின் வழக்கம்.
சிவாஜி படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரவுள்ளதால் பாபா குகைக்குச் சென்று மனமுருக பிரார்த்தனை செய்யவுள்ளாராம் ரஜினி.
நேற்று முன்தினம்தான் சிவாஜி படம் தொடர்பான அனைத்து வேலைகளையும் முடித்தார் ஷங்கர். படத்தின் முதல் பிரதி ரெடியாகி விட்டதாகவும் ரஜினியிடம் கூறியுள்ளார். தற்போது ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அவையும் கூட முடியும் தருவாயில் உள்ளனவாம்.
எனவே திட்டமிட்டபடி மே 17ம் தேதி சிவாஜி திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர் தரப்பு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.
படம் திரைக்கு வருவதற்கு முன்பு இமயமலைக்குச் சென்று திரும்பி விட முடிவு செய்த ரஜினி இன்று கிளம்புகிறார். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து இமயமலைக்குச் செல்கிறார்.
ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார் நாத், பாபாஜி குகை ஆகிய இடங்ளுக்கு செல்கிறார். கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு இமயமலை பக்கம் தான் சுற்றிக் கொண்டிருப்பார் ரஜினி. மே 16ம் தேதி சென்னை திரும்புகிறார்.
ரஜினி இமயமலைக்குப் போவதை ரஜினி ரசிகர் மன்றத் தலைவரான சத்யநாராயணா உறுதி செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications