விமானத்தில் ரஜினி பை மாயம்
லண்டனிலிருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பை காணாமல் போனது.
பின்னர் விமான நிறுவன ஊழியர்கள் பையைத் தேடிக் கண்டுபிடித்து ரஜினியிடம் ஒப்படைத்தனர்.கடந்த 15 நாட்களாக பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்தார் ரஜினி. மகள் செளந்தர்யா இயக்கும் சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படத்திற்கான ஷூட்டிங்குக்காகவும், ஓய்வுக்காகவும் இந்த 15 நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார் ரஜினி.
தனது பயணத்தை முடித்துக் காண்டு சனிக்கிழமை அவர் லண்டனிலிருந்து சென்னைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் திரும்பினார்.
இரவு விமான நிலையம் வந்திறங்கிய ரஜினி, தனது பேகேஜுக்காக காத்திருந்தார். அப்போது அவரது ஒரு பையைக் காணவில்லை.
அது அந்த விமானத்தில் வந்து சேரவில்லை. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.
விமான நிறுவன ஊழியர்கள் ரஜினியின் பை எங்கே உள்ளது என்பது குறித்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் 24 மணி நேரத்தில் ரஜினியின் பை சென்னை வந்து சேர்ந்தது. பின்னர் அந்தப் பை ரஜினியிடம் சேர்க்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு கூட இப்படித்தான் ஏ.ஆர்.ரஹ்மான் லண்டன் போனபோது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பேகேஜில் போட்ட அவரது லேப்டாப்பை காணவில்லை.
பிரிட்டிஷ் ஏர்வேஸ்ல போனா இனிமே ஜாக்கிரதையாக இருக்கணுமப்பா!


Click it and Unblock the Notifications











