இமயமலைக்குப் பறந்த ரஜினி

ரஜினிகாந்த் அதிக விருப்பத்துடன் செல்லக் கூடிய இடம் இமயமலை. வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக இமயமலைக்குச் சென்று விடுவார் ரஜினி. அங்குள்ள பாபா குகையில் உள்ள பாபா கோவிலில் வழிபடுவதை பெரும் நிம்மதியான விஷயமாக ரஜினி கருதுகிறார்.
அந்த வகையில் தற்போதும் அவர் இமயமலைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பாபா கோவிலில் பிரார்த்தனை செய்யவுள்ளார். அடுத்த 2 வாரங்களுக்கு அவர் பாபா குகையில்தான் தங்கியிருப்பாராம். பிப்ரவரி முதல் வாரத்தில்தான் அவர் சென்னைக்குத் திரும்பவுள்ளார். வந்தவுடன் குசேலன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த்தின் செயலாளர் சத்யநாராயணா கூறுகையில், புதிய படங்கள் தொடங்கும்போது பாபா கோவிலுக்கு ரஜினி செல்வது வழக்கமானதுதான். எனவே இப்போதைய பயணத்திலும் வேறு விசேஷம் எதுவும் இல்லை என்றார்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த என்டிடிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்துக்கு 2007ம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்காளர் என்ற விருது கிடைத்தது. பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து விருதைப் பெற்றார் ரஜினி.
அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பத்ரிநாத்துக்கு கிளம்பிச் சென்றாராம் ரஜினி. இமயமலைச் சாரலில் உள்ள பத்ரிநாத்திலிருந்து கால்நடையாகவே பாபா கோவிலுக்கு அவர் போனார். அவருடன், அவரது நெருங்கிய நண்பர்கள் இருவரும் உடன் சென்றுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











