மீண்டும் மருத்துவ பரிசோதனை... 10 நாள் ஓய்வு... அமெரிக்கா பறந்தார் ரஜினி?
சென்னை: மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வதற்காக நடிகர் ரஜினி மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு அவர் மீண்டும் சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு கடந்த 2011ம் ஆண்டு ராணா படப்பிடிப்பின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றார்.
40 நாட்கள் சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்து சென்னை திரும்பிய ரஜினி, அதனைத் தொடர்ந்து கோச்சடையான், லிங்கா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அமெரிக்கப் பயணம்...
கபாலி படத்தில் நடித்துக் கொண்டே ஷங்கரின் இயக்கத்தில் தயாராகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படத்திலும் அவர் நடித்தார். பின்னர், கபாலி பட வேலைகள் முடிவடைந்ததும் தனது குடும்பத்தினருடன் அவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

2 மாதங்கள் ஓய்வு...
சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கி அவர் ஓய்வு எடுத்தார். அப்போது ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அமெரிக்காவில் அவர் சிகிச்சைப் பெற்றதாகவும் தகவல்கள் வெளியானது.

சென்னை திரும்பினார்...
பின்னர் வெர்ஜினியாவில் உள்ள சச்சிதானந்த லோட்டஸ் கோவிலுக்கு சென்றும் சாமி கும்பிட்டது உள்ளிட்ட சில புகைப்படங்கள் வெளியானது. இதனால் அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக கபாலி ரிலீசான சில தினங்களில் அவர் சென்னை திரும்பினார்.

2.0 படப்பிடிப்பு...
அதனைத் தொடர்ந்து மீண்டும் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையையும் அவர் விசாரித்தார்.

மீண்டும் மருத்துவ பரிசோதனை...
இந்நிலையில் தற்போது ரஜினி மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அமெரிக்கா செல்வதாகவும், 10 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











