ஓபனாக சொன்ன கமல்ஹாசன்.. ரொம்ப யோசிக்கும் ரஜினிகாந்த்.. லோகேஷுக்கு ஜாக்பாட் அடிக்குமா? - அந்தணன்!
சென்னை: சமீபத்தில் அந்தணன் அவர்கள் அளித்த ஒரு பேட்டியில் ரஜினி, கமல் இணைந்து நடிக்க இருந்த படம் நடக்குமா? நடக்காதா? என்கிற காரணத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்தணன் அவர்களின் இந்த தகவல் திரை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழு, எட்டு மாதங்களுக்கு முன்பு ரஜினி, கமல் இணைந்து நடிக்க இருந்த ஒரு படம் குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. விக்ரம் படத்திலேயே ரஜினி நடிக்க வேண்டியது. ஆனால், கமல் கொஞ்சம் செட் பேக்ல இருந்தாரு. அப்போ ராஜ் கமல் நிறுவனத்திற்காக ஒரு படம் பண்ணி கொடுங்கன்னு ரஜினி கிட்ட கேட்டிருந்தாரு. கமலுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ரஜினியும் சம்மதித்தார்.

லோகேஷ் கனகராஜ் கதை சொன்னதும் ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சம்பளம் பற்றி பேசும் போது தான் கமலுடன் இணைந்து வேறு ஒருவர் இந்த படத்தை தயாரிக்கிறார் என்பது ரஜினிக்கு தெரிய வந்தது. இதனால், கமலுக்கு தானே உதவி செய்கிறோம், இதில் ஏன் இன்னொரு தயாரிப்பாளர் என்ற வருத்தம் ரஜினிக்கு ஏற்பட்டது.
பின்னாட்களில் மகேந்திரன், கமலுக்கு பக்கபலமாக இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை கவனித்துக்கொள்வதையும் விக்ரம் படம் பெற்ற வெற்றியையும் ரஜினி உணர்ந்தார். அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்க சம்மதித்தனர். லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் ஒரு கதை சொன்னார். ஆனால், இப்போது சூழ்நிலை மாறிவிட்டதால் அந்த படம் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
துபாயில் நடந்த சைமா விருது விழா நிகழ்வில் கமல் தானாக முன்வந்து ரஜினியுடன் நடிக்கும் படம் குறித்து பேசவில்லை. சதீஷ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருந்தார். கமல் ஏற்கனவே பல படங்கள் துவங்கி பாதியில் நின்றுள்ளன. ஆகையால், இது சம்பிரதாயமாக சொல்லப்பட்டதா அல்லது உண்மையில் நடக்க போகிறதா என்பதை இப்போது கணிக்க முடியாது.
கமல் ஓப்பனாக அறிவித்தும் ரஜினி தரப்பில் இருந்து எந்த ட்வீட்டும் வரவில்லை. ஒருவேளை ரஜினி இன்னும் தயாராகவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. மேலும், ரஜினி தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஆகையால், இந்த படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
கமலுக்கு லோகேஷ் மீது ஒரு நல்ல மதிப்பு உள்ளது. ஏனென்றால், அவர் கமலுக்கு ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்தவர். அதே மரியாதை ரஜினிக்கும் இருக்க வேண்டும் அல்லவா? ஒருவேளை, லோகேஷ் கமல் ரசிகராக இருப்பதால், படத்தில் கமலின் கதாபாத்திரத்தை உயர்த்தி, ரஜினியை குறைத்து மதிப்பிடுவாரோ என்ற பயம் ரஜினிக்கு இருக்கலாம்.
இருவருமே பெரிய சிகரங்கள், ரசிகர்களை ஏமாற்ற முடியாது. ரஜினி சும்மா வந்து நின்னாலே தியேட்டர் அதிரும். கமல் கஷ்டப்பட்டு நடித்து கைத்தட்டல் வாங்குவார் என்று கமலே சொல்லியிருக்கிறார். ஆகையால், அந்த சிக்கல் இருக்காது. ஆனால், ரஜினி ஒரு ட்வீட் கூட போடாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று அந்தணன் கூறினார்.
கூலி படத்தின் ரிசல்ட் தான் ரஜினிகாந்தை இந்த ப்ராஜெக்ட்டை ஓகே சொல்லவிடாமல் தடுக்கிறதோ என்னவோ தெரியவில்லை என்றும் தனது சந்தேகத்தை அந்தணன் கிளப்பியுள்ளார். ரஜினிகாந்த் எப்போதுமே விமர்சனங்களை ரொம்பவே கவனமாக கேட்பார். கூலி படத்திற்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் வரவேற்பு குறைவு ரஜினிகாந்தை பாதித்து இருக்கும் என்றும் கூறுகிறார். அதையெல்லாம் தாண்டி இருவரையும் இணைக்கும் அளவுக்கு லோகேஷ் நல்ல கதையை பண்ணினால் மட்டும் தான் ரஜினி க்ரீன் சிக்னல் காட்டுவார் என்றும் கூறியுள்ளார்.
இளையராஜா நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நேரு ஸ்டேடியத்தில் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் விழாவில் ஒன்றாக பங்கேற்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். அங்கே ரஜினிகாந்த் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டால் கண்டிப்பாக ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுவார்கள்.


Click it and Unblock the Notifications











