ஒண்டர்புல் கமல்! - ரஜினி பாராட்டு
| Click here for more images |
தசாவதாரத்தில் கமல்ஹாசன் போட்டுள்ள வேடங்களையும், அவரது நடிப்பையும் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினி மெய் சிலிர்த்து அவரை வாயார பாராட்டியுள்ளார்.
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரூ. 60 கோடி பட்ஜெட்டில் படு பிரமாண்டமாக, பிரமாதமாக உருவாகியுள்ள படம் தசாவதாரம்.
இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்து விட்டது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. பொங்கலுக்குப் படத்தைத் திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் பத்து வித்தியாசமான வேடங்களில் அசத்தலாக நடித்துள்ளார் கமல். இதில் 90 வயது பாட்டி வேடமும் முக்கியமான ஒன்று.
கமல்ஹாசன் இந்தப் படத்திற்காக நடித்த நேரத்தை விட மேக்கப் போட எடுத்துக் கொண்ட நேரம்தான் ஜாஸ்தியாம். அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 மணி நேரத்திற்கு மேல் அவரால் நடிக்க முடியாதாம். காரணம் அவரது மேக்கப் அப்படி.
அந்த மேக்கப் 1 மணி நேரத்திற்குத்தான் இருக்குமாம். அதன் பின்னர் கலைந்து போக ஆரம்பித்து விடும். இதனால்தான் படப்பிடிப்பு இத்தனை காலத்திற்கு இழுத்துக் கொண்டு போனதற்குக் காரணம்.
தசாவதாரம் படத்தை உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். அதேபோல கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினியும் படு ஆவலோடு எதிர்பார்த்துள்ளார்.
ஏற்கனவே படப்பிடிப்பின் போது கமல்ஹாசனை நேரில் சந்தித்து கமல்ஹாசனின் கெட்டப்கள் குறித்த போட்டோக்களைப் பார்த்து மகிழ்ந்தார் ரஜினி. இந்த நிலையில் படத்தின் சில முக்கியக் காட்சிகளை ரஜினிக்குப் போட்டுக் காட்ட விரும்பினார், அவரின் இன்னொரு நண்பரும், தசாவதாரம் இயக்குநருமான கே.எஸ்.ரவிக்குமார்.
சென்னை அசோக் நகரில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருமாறு ரவிக்குமார் விடுத்த வேண்டுகோளை ஏற்று ரஜினி அங்கு விரைந்தார். ரஜினியை வரவேற்ற ரவிக்குமார், தனது எடிட்டிங் அறைக்குக் கூட்டிச் சென்று படத்தில் கமல் போட்டுள்ள கெட்டப்களைக் காட்டியுள்ளார்.
அதைப் பார்த்த ரஜினி வியந்துள்ளார். இதெல்லாம் நிஜமாவே கமல் நடித்ததா, அல்லது மாஸ்க் போட்டு எடுத்தீர்களா என்று கேட்டுள்ளார். எதிலும் மாஸ்க் கிடையாது, எல்லாமே கமல்சார் தானாகவே செய்தது என்று ரவிக்குமார் கூறியதும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கேப் போய் விட்டாராம் ரஜினி.
அதை விட ஒரு பாடல் காட்சியில் கமலின் நடிப்பையும், மேக்கப்பையும் பார்த்து வியந்தவவர், தன்னையும் அறியாமல் எழுந்து நின்று கை தட்டிப் பாராட்டியுள்ளார். அடுத்த நொடியே செல்போனை எடுத்து கமல்ஹாசனை போனில் பிடித்து சுமார் கால் மணி நேரம் பாராட்டிப் பேசினாராம்.
கமல்ஹாசனின் நடிப்பைப் பார்த்து ரஜினி பரவசம் அடைந்ததும், கமலிடம் போனில் பாராட்டிப் பேசியதையும் பார்த்த ரவிக்குமார் நெக்குருகிப் போய் விட்டாராம். அடடா, என்ன ஒரு நட்பு, என்ன ஒரு பெருந்தன்மை என்று வியந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











