ரஜினி முதல் சூர்யா வரை... அரசியல் எதிர்ப்புகளை சந்தித்த டாப் ஹீரோக்கள் – ஒரு அலசல்
சென்னை : சூர்யா நடித்த ஜெய்பீம் படம் நவம்பர் 2 ம் தேதி ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் பாராட்டுக்களை அள்ளி குவித்த இந்த படம், தற்போது மிகப் பெரிய அரசியல் விவாத பொருளாக மாறி உள்ளது.
Recommended Video
இந்த படத்தை தயாரித்து நடித்ததற்காக சூர்யாவை தாக்கினால் லட்சக் கணக்கில் பரிசு என்றும், அந்த ஊருக்கு சூர்யா வந்தால் அடிப்போம், இந்த ஊருக்கு வந்தால் உடைப்போம் என்றெல்லாம் பகிரங்கமாக சவால் விட்டு வருகிறார்கள். சூர்யாவிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டும் சிலர் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.
சோஷியல் மீடியாவிலும் சிலர், எதிர்ப்பிற்கு பிறகு காலண்டரை நீக்கி விட்டீர்கள். அதே போல் இந்த கட்சியின் கரை வேட்டி காட்சியை ஏன் வைத்தீர்கள் என சொல்லுங்கள் என சூர்யாவை வம்புக்கு இழுத்து வருகிறார்கள். அரசியல் கட்சியினரால் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்கும் முதல் ஹீரோ சூர்யா கிடையாது. இதற்கும் முன்பும் இது போன்ற அரசியல் எதிர்ப்புக்களை சந்தித்த ஹீரோக்களை பற்றி இங்கே பார்ப்போம்.

ரஜினிகாந்த்
ரஜினி படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதாக பாமக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக பாபா படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி பாமக நிறுவனம் ராம்தாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சில தியேட்டர்கள் மீது தாக்குதல், ரஜினியின் உருவ பொம்மை மற்றும் ரீல் பெட்டிகள் தீவைத்து எரிக்கப்பட்டன.

அஜித்குமார்
திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அரசியல் கட்சிகள் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்ளும்படி நடிகர்கள் மிரட்டப்படுவதாக அஜித் பகிரங்கமாக பேசினார். இதனால் பல எதிர்ப்புக்களையும், பிரச்சனைகளையும் அஜித் சந்தித்தார். இறுதியில், கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் வீட்டிற்கே சென்று அஜித், தான் பேசியதற்காக விளக்கம் அளித்தார். அதற்கு பிறகே எதிர்ப்புகள் அடங்கின.

கமலஹாசன்
இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சில இஸ்லாமிய அமைப்புக்கள் புகார் தெரிவித்ததால், கமலின் விஸ்வரூபம் படம் சென்சார் போர்டின் ஒப்புதல் கிடைத்தும் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதற்கு முதல்வர் ஜெயலலிதா தான் காரணம் என கமல் குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையானது. தனக்கான சுதந்திரம் மறுக்கப்பட்டால் நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்றும் பேசினார். பெரும் எதிர்ப்பு, சர்ச்சைகளுக்கு பிறகு, சில வசனங்களை மியூட் செய்ய கமல் ஒப்புக் கொண்டதை அடுத்து, அந்த படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்பட்டது.

விஜய்
2013 ம் ஆண்டு தலைவா படத்தின் டைட்டில் கார்டில் Time to Lead என்ற வாசகத்தை நீக்கச் சொல்லி அதிமுக தரப்பில் மிகப் பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது விஜய்க்கு. இதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விஜய்க்கு அனுமதியும் மறுக்கப்பட்டது. பிறகு தனது தரப்பு விளக்கத்தை சொல்லி விஜய் வீடியோ வெளியிட்ட பிறகே படத்தை ரிலீஸ் செய்ய அரசு சார்பில் அனுமதிக்கப்பட்டது.
இதே போல் சர்கார் படத்தில் ஒரு விரல் புரட்சி பாடலில் அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிப்பது போன்ற காட்சிக்கு தமிழக அமைச்சர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது அரசை அவமதிப்பது போல் ஆகும் என தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். கடும் எதிர்ப்பிற்கு பிறகு அந்த காட்சிகளை நீக்க டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதே போல் வில்லியான வரலட்சுமியின் கேரக்டருக்கு கோமள வள்ளி என பெயர் வைக்கப்பட்டதும் எதிர்ப்பை கிளப்பியது. இதனால் அந்த பெயர் வரும் இடங்கள் மியூட் செய்யப்பட்டன.


Click it and Unblock the Notifications











