16 வயதினிலே முதல்.. லிங்கா வரை..! பட்டையை கிளப்பும் ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள்!
சென்னை: பஞ்ச் டயலாக் என்றாலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயர்தான் சின்ன குழந்தைக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரது பஞ்ச்களில் பொறி பறக்கும். அதன்பிறகுதான் இன்றைய இளம் நடிகர்கள் பஞ்ச் டயலாக்கில் ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
ரஜினிகாந்த்தின் பஞ்ச் டயலாக்குகள் ஹீரோயிசத்தை உயர்த்தி பிடிக்க மட்டுமின்றி வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டிருப்பது சிறப்பு. ரசிகர்கள் மனதில் என்றென்றைக்கும் நீங்காமல் இடம் பிடித்த பஞ்ச் டயலாக்குகள் சிலவற்றை இப்போது நினைவுபடுத்திக் கொள்வோம்.

மல.. அண்ணா மல..
அண்ணாமலை திரைப்படம் ரஜினியின் மாஸ் இமேஜுக்கு நன்கு தீனி போட்ட படம். அதில் வரும் ஒரு டயலாக், மல.. அண்ணா மல.. எதிரிகளை பார்த்து சொல்லும் இந்த டயலாக்கை கேட்டு ரஜினி ரசிகர்களின் உடல் புல்லரிப்புக்கு உள்ளானது என்னவோ நிச்சயம். கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைச்சது என்னிக்கும் நிலைக்காது, நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன் போன்றவை அந்த திரைப்படத்தில் வந்த அதிரிபுதிரி அதிரடி டயலாக்குகள்.

பாட்ஷா
அண்ணாமலை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் ரஜினி இணைந்த மற்றொரு மாஸ் திரைப்படம். நெல்லை மாவட்டம் திசையன்விளை என்ற சிறு நகரில் 100 நாட்களை கடந்து ஓடியது பாட்ஷா என்றால் அதன் வீச்சை தெரிந்துகொள்ளலாம். இன்றுவரை ரஜினி ரசிகர்களின் ஆதர்ஷ படம் பாட்ஷாதான். அதில் வரும் பஞ்ச்தான் 'நான் ஒரு தடவ சொன்னா நூறு நாள் சொன்ன மாதிரி. மாஸ், தெறி மாஸ் என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமே பாட்ஷாவும் அதில் வந்த இந்த டயலாக்கும்தான்.

முத்து
அரசியலுக்கு ரஜினி வருவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வந்த முத்து திரைப்படத்தில், ரஜினி பேசும், "நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்" என்ற டயலாக் ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு ஏற்றிவிட்டது.

அருணாச்சலம்
ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் என்ற டயலாக் அருணாச்சலம் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. இதையும் அரசியலோடு முடிச்சு போட்டு பார்த்தனர் விமர்சகர்கள்.

படையப்பா
ரஜினியின் மாஸ் மரியாதையை உயர்த்திய மற்றொரு படம் படையப்பா. என் வழி தனி வழி.. அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமாக கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல.. என்பது போன்ற டயலாக்குகள் படையப்பாவில் பட்டையை கிளப்பின.

சிவாஜி
பிரமாண்ட இயக்குநர் ஷங்கருடன் ரஜினிகாந்த் கைகோர்த்த முதல் படம் சிவாஜி. இதில் வரும், பேரக்கேட்டவுடன ச்சும்மா அதிருதில்ல...
'கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' என்பது போன்ற டயலாக்குகள் செல்போல் காலர் டியூனாக வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றன.

எந்திரன்
ரோபோ குறித்த எந்திரன் திரைப்படத்தில், எதிர்மறை ரஜினி கேரக்டர் பேசும் ரோபோ.... ம்மேமே... என்பது போன்ற ஒற்றை டயலாக் பஞ்ச்களுக்கு விசில் பறந்தது.

லிங்கா
நான் எந்த வேலையா இருந்தாலும் என் மனசுக்கு பிடிச்சாதான் செய்வேன்.... வாழ்க்கையில் எதுவும் ஈசியில்லை, முயற்சி பண்ணுனா எதுவும் கஷ்டமில்லை.... இதுதான் இன்று ரிலீஸ் ஆகியுள்ள லிங்கா டயலாக்.

அப்பவே அப்படித்தான்
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பிறகுதான் பஞ்ச் டயலாக் பேசுகிறார் என்று யாராவது நினைத்தால் தப்பு என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள். ஏன்னா, ரஜினி வில்லனாக நடித்த '16 வயதினிலே' திரைப்படத்தில் பரட்டை கேரக்டர் பேசுமே 'இது எப்டி இருக்கு..' என்ற டயலாக் அது இன்று வரை ரசிகர்கள் மனதைவிட்டு நீங்கவில்லை. படத்தின் ஹீரோ கமலே பஞ்ச் டயலாக் பேசவில்லை.
முரட்டுக்காளை படத்திலும், ரஜினிகாந்த் ஒரு டயலாக் சொல்வார். உங்களில் யாருக்காவது நினைவு இருக்கிறதா..? சிலருக்கு நினைவிருக்கலாம். அந்த டயலாக்: சீவிடுவேன்...


Click it and Unblock the Notifications











