மீண்டும் சிக்கலில் சிவாஜி; ரஜினி, ஷங்கருக்கு நோட்டீஸ்!
சிவாஜி படக் கதை தொடர்பாக புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கர், நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவாஜி படக் கதைக்கு உரிமை கொண்டாடி சுடலைமுத்து என்பவர் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் சிவாஜி படக் கதைக்கு உரிமை கொண்டாடி புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த இளங்கோவன் என்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக 13வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், நான் எழுதிய கதையைக் காப்பி அடித்துத்தான் சிவாஜி படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நான் எனது கதையை கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் இயக்குநர் ஷங்கரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன். இந்தக் கதையை படித்துப் பார்த்த ஷங்கரின் அலுவலக ஊழியர்கள், கதையை மட்டும் எடுத்துக் கொண்டு, நான் அனுப்பிய கவரின் உள்ளே சில வெற்றுத் தாள்களை வைத்து நிராகரிக்கப்பட்டது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
நான் அனுப்பிய கதையை எடுத்துக் கொண்டு அதில் சில மாற்றங்களைச் செய்து, என்னை மோசடி செய்து சிவாஜி படத்தை எடுத்துள்ளனர். எனது கதையை அடிப்படையாகக் கொண்டுதான் சிவாஜி படம்
உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் என்னை மோசடி செய்துள்ளனர், காப்பிரைட் சட்டத்தை மீறியுள்ளனர். எனவே சிவாஜி படத்தின் ஆடியோ, வீடியோ உரிமைகள், வெளிநாட்டு உரிமை, டப்பிங் உரிமை, ரீமேக் உரிமை உள்ளிட்டவற்றை வழக்கு முடியும் வரை யாருக்கும் தரக் கூடாது என கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் இளங்கோவன்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நஸீர் அகமது, வருகிற 21ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கூறி ரஜினிகாந்த், ஷங்கர், சரவணன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











