போலீசுக்கு குற்றவாளி..மக்களுக்கு ஹீரோ..விபத்தில் பலியான பஞ்சாபி நடிகர் தீப் சித்து யார் தெரியுமா?
டில்லி : டில்லி செங்கோட்டையில் கடந்த ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கூறப்பட்டு வந்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து கார் விபத்தில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். ஒரு மாதமாக நடந்து வந்த போராட்டத்தில் திடீரென கலவரம் வெடித்தது. இதில் செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு பதிலாக வேறு கொடி ஏற்றப்பட்டது. இந்த கலவரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டவர் பஞ்சாபி நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்து. இந்த கலவரத்தை தான் முன் நின்று நடத்தியதை அவரே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். தலைமறைவாக இருந்த தீப் சித்து பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டில்லி போலீசார் அறிவித்திருந்தனர்.

ஜாமினில் வெளியே வந்த சித்து
கலவர வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட சித்து, ஏப்ரல் மாத முதல் வாரத்தில் ஜாமினில் வெளியே வந்தார். பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டு, ஏப்ரல் இறுதியில் இரண்டாவது முறையாக ஜாமின் பெற்றார். போலீசார் எப்போது கூப்பிட்டாலும் விசாரணைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்தது.

கார் விபத்தில் தீப் சித்து பலி
இந்நிலையில் டில்லியில் இருந்து பஞ்சாப்பிற்கு சென்று கொண்டிருந்த போது சித்துவின் ஸ்கார்பியோ கார், சரக்கு வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் சித்து சென்ற காரின் ஒரு பக்கம் முழுவதும் நொறுங்கி சேதமடைந்தது. இதில் பலத்த காயமடைந்த சித்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சித்துவுடன் வந்த பெண்ணும் இதில் பலத்த காயமடைந்துள்ளார்.

யார் இந்த தீப் சித்து
பஞ்சாப்பின் பிரபல மாடலான தீப் சித்து, சட்டம் பயின்றவர். டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி போன்றோரிடம் அசிஸ்டென்டாக பணியாற்றிய சித்து, நடிகர் தர்மேந்திர தயாரித்த Ramta Jogi என்ற பஞ்சாபி மொழி படத்தின் மூலம் ஹீரோ ஆனார். பாலிவுட் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். வழக்கறிஞராக சிறிது காலம் பயிற்சி செய்து வந்த சித்துவிற்கு சினிமாவில் நடிக்க அதிக வாய்ப்புக்கள் கிடைத்ததால் அவர், வழக்கறிஞர் தொழிலை விட்டு, நடிகரானார். இவர் பாலிவுட் நடிகர் சன்னி தியோலின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர்.

பிரபலங்கள் இரங்கல்
பஞ்சாப்பில் பிரபலமானவராக இருந்த 37 வயதே ஆகும் சித்துவின் இந்த திடீர் மறைவிற்கு பஞ்சாப் முதல்வர் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்களான அமிஷா பட்டேல் உள்ளிட்டோரும் ட்விட்டரில் தங்களின் இரங்கலை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











