சினிமாவில் மட்டும் ஒரு படத்தை யாரையும் நம்பி எடுக்கக் கூடாது..! - 'சீரியஸ்' சந்தானம்
சினிமாவில் தன்னை நம்பி மட்டுமே ஒருவர் படம் தயாரிக்க வேண்டும். நண்பர்களையோ வேறு யாரையுமோ நம்பி தயாரிக்கக் கூடாது, என்றார் நடிகர் சந்தானம்.
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இனிமே இப்படித்தான்'. இதில் நாயகிகளாக ஆஷ்னா, அகிலா நடிக்கின்றனர். முருகன் - ஆனந்த் இரட்டையர் இயக்குகின்றனர். இந்த படத்தை சந்தானம் தனது ஹேன்ட் மேட் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

தயாரிப்பு - ரிலீஸ்
விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சந்தானம் கூறுகையில், "‘இனிமே இப்படித்தான்' படத்தை முதல் தடவை நானே தயாரித்து ரிலீசும் செய்கிறேன்.

கஷ்டம்
படங்கள் எடுப்பது ஈஸி.. ரிலீஸ் செய்வதுதான் கஷ்டம். படத்தின் பெயரை பதிவு செய்வதிலிருந்து அதை தியேட்டருக்கு கொண்டு வருவதுவரை ஏகப்பட்ட கஷ்டங்களைப் பார்க்க வேண்டி உள்ளது. ஆனால் சினிமா மீதுள்ள ஈடுபாடு இதையெல்லாம் தாங்கிக் கொள்ள வைக்கிறது.

காமெடியனாகவும் உண்டு
இந்த படத்தின் கதை யதார்த்தமாக இருக்கும். காமெடி, சென்டிமென்டும் உள்ளது. இளைஞர்களுக்கு தேவையான ஒரு விஷயத்தையும் வைத்து உள்ளோம். இனிமேல் தொடர்ந்து கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று சொல்ல மாட்டேன். எனக்கு வசதியாக இருக்கும் சூர்யா, சிம்பு, உதயநிதி போன்ற ஹீரோக்களுடன் இணைந்து காமெடி வேடங்களிலும் நடிப்பேன்.

ஆர்யா, சிம்பு அட்வைஸ்
கதாநாயகன் ஆனதால் ஆர்யா அறிவுரைப்படி உடம்பை குறைத்தேன். என்ன டிரெஸ் அணிய வேண்டும் என்பது பற்றி சிம்பு சொல்லி கொடுத்தார். ‘இனிமே இப்படித்தான்' படத்தில் நான் நேரடியாக பார்த்த சில விஷயங்கள் நண்பர்களின் காதல் சமாசாரங்கள், வசனம் போன்றவற்றை அப்படியே வைத்து உள்ளோம்.

நோ ஆக்ஷன்
நடனம் கற்று ஆடவும் செய்துள்ளேன். நல்ல படமாக வந்துள்ளது. ஆக்ஷன் படங்களில் நடிப்பது பற்றி சிந்திக்கவில்லை. அது எனக்கு சரிப்படாது. எனக்கு காமெடி வரும். அதனால் காமெடி நாயகனாகவே தொடர்வேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











