தமிழ் சினிமாவில் பேய் தான் இப்போ 'சூப்பர் ஸ்டார்'... 'டெரர்' கிளப்பும் சந்தானம்!
சென்னை: தமிழ் சினிமாவின் பாணி மாறி விட்டது. தற்போதைய சூழ்நிலையில் பேய் தான் சூப்பர் ஸ்டார் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் சந்தானம்.
காமெடி நடிகரான சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தைத் தொடர்ந்து நாயகனாக நடித்துள்ள படம் இனிமே இப்படித்தான். இப்படம் வரும் 12ம் தேதி ரிலீசாகிறது.
இதையொட்டி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் சந்தானம். அப்போது அவர் கூறியதாவது :-

இனிமே இப்படித்தான்...
இனிமே இப்படித்தான் படம் எனது சொந்தபடம். ‘இனிமே இப்படித்தான்' என்றால் அது படத்தின் தலைப்பு தான். நான் இனிமேல் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அர்த்தம் இல்லை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அது எனக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிக்கத் தயராக இருக்கிறேன்.

தயாரிப்பாளரின் கஷ்டம்.,.
இந்த படத்தை தயாரிக்கும் போது தான் ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்று எனக்கு தெரியவந்தது. ஆனாலும் தொடர்ந்து புதிய படங்களை தயாரிப்பேன். படம் எடுப்பதை விட அதை வெளியிடுவது தான் சிரமம்.

காமெடி காட்சிகள்...
தற்போது மக்கள் படம் முழுக்க காமெடி காட்சிகளையே எதிர் பார்க்கிறார்கள். முன்பெல்லாம் காமெடி காட்சிகள் தனியாக எடுத்து சேர்க்கப்படும். இப்போது படத்தோடு வருவதை ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

பேய்ப் படங்கள்...
தற்போது தமிழ் சினிமாவின் பாணி மாறி விட்டது. பேய்க் கதைகளை மையமாக வைத்து எடுக்கும் படங்கள் அதிக அளவில் வெற்றி பெறுகின்றன. அப்படி பார்த்தால் பேய் தான் இப்போது சூப்பர்ஸ்டார்.

ஆஸ்னா சவேரி...
எனது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக ஆஸ்னா சவேரி நடிப்பதற்கு காரணம், அவர் முதல் படத்தில் திறமையாக நடித்ததுதான்.

அரசியல்...
இப்போது நான் ‘பிசி'யாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது டைரக்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது உள்ள சூழ்நிலையில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

2 வாரம் ஓடினாலே...
இப்போது எல்லாம் ஒரு படம் 2 வாரத்துக்கு மேல் ஓடுவது இல்லை. அப்படி ஓடினால் அது பெரிய வெற்றிப்படம் தான்.

வடிவேலுவுடன் போட்டி இல்லை...
இனிமே இப்படித்தான் படம் வெளியாகும் போது நடிகர் வடிவேலு நடிக்கும் படமும் வெளியாகிறது. ஆனால் எங்களுக்குள் போட்டி எல்லாம் கிடையாது.

என் வழி தனி வழி...
அவருக்கு என்று ஒரு பாதை இருக்கிறது. அதில் அவர் சிறப்பாக பயணம் செய்கிறார். எனக்கு என்று ஒரு பாதையில் நான் போய்கொண்டு இருக்கிறேன்' என இவ்வாறு சந்தானம் அப்பேட்டியில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











