சினிமா என்ற சைக்கிளிலிருந்து நடுவில் இறங்கிட்டேன்! - சரத்குமார்
சினிமா என்ற சைக்கிளை இடையில் தவற விட்டுட்டேன். இனி தீவிரமாக சினிமாவிலும் கவனம் செலுத்துவேன் என்று நடிகரும் சமக தலைவருமான சரத்குமார் கூறினார்.
முன்னணி நடிகராக இருந்து, தீவிர அரசியலுக்குத் தாவியவர் நடிகர் சரத்குமார். கடந்த தேர்தலில் அவர் படுதோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, மீண்டும் சினிமாவுக்குத் திரும்பியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'அடங்காதே' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சரத். அவர் கூறுகையில், "நான் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறேன். நல்ல கதை, நல்லபாத்திரங்களை தேர்வு செய்கிறேன்.

வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் சகஜமானதுதான். அது எல்லோருக்கும் ஏற்படும். சைக்கிளில் இரு பெடல் மாதிரி ஒன்று மேலே வரும்போது மற்றொன்று கீழே இறங்கித்தான் ஆகும். ஆனால் நான் அந்த சைக்கிளை தொடர்ந்து ஓட்டாமல் திடீர் என்று கீழே இறங்கிவிட்டேன். அதை இப்போது உணர்கிறேன்.

இப்போது ஜி.வி.பிரகாசும் நானும் இணைந்து ஒரு படத்தில் நண்பர்களாக நடிக்கிறோம். சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். இதேபோல் கன்னடத்தில் நடிகர் புனித் ராஜ்குமாரும் நானும் இணைந்து 'ராஜகுமாரா' என்றபடத்தில் நடிக்கிறோம். இந்த படம் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இன்னும் இரண்டு படங்களில் நடிக்க கதை கேட்டுவருகிறேன். இனி தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தப் போகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











