சத்யராஜும், சாமியார்களும்!
தமிழக அளவிலும், தேசிய அளவிலும் பிரபலமான சில சாமியார்களை மையமாகக் கொண்ட ஒரு புதிய படத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.
லொள்ளு, லோலாயி, குசும்பு, கேப்மாரித்தனமான கேரக்டர்களில் நிறைய நடித்துள்ள சத்யராஜ், பெரியார் படத்துக்குப் பிறகு இனிமேல் நல்ல கதைகளிலும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பும் படங்களிலும் மட்டுமே நடிப்பேன் என்றார்.தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, சாமியார்களைப் பற்றிய ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்குப் பெயரும் சாமியார்தான்.
சுந்தரி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நாடு முழுவதும் பிரபலமான ஒரு சாமியார் வேடத்தில் நடிக்கவுள்ளாராம் சத்யராஜ். இந்த வேடம் பெரும் சர்ச்சையை கிளப்பும் என்று இப்போதே பேச்சு கிளம்பி விட்டது.
படத்தில் சத்யராஜ் மட்டும் சாமியாராக நடிக்கவில்லை. ஏகப்பட்ட சாமியார்கள் இருக்கிறார்களாம். சிவசங்கர் பாபா வேடத்தில் மதன் பாப் நடிக்கவுள்ளார். பிரேமானந்தா வேடத்தில் நகைச்சுவை ராஜா செந்தில் நடிக்கவுள்ளார் (வேடப் பொருத்தம் அபாரமாக இருக்கும்). இந்தப் படத்தை செந்தில்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பிரகாஷ் நடித்த தயா படத்தை இயக்கியவர். நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா வசனம் எழுதுகிறார்.
சத்யராஜ் எந்த சாமியார் வேடம் போடப் போகிறார் என்று தெரியவில்லை. அவரிடம் சிக்கியுள்ள சாமியார் யாரோ?. (யார் மனதையும் புண்படுத்தாமல் படம் எடுத்தால் சரி...)
இதற்கிடையே இப்போது பொள்ளாச்சி மாமா என்ற படத்தில் கும்தாஜ், அபினயஸ்ரீ, சூசன் ஆகியோருடன் சேர்ந்து பயங்கர ஆட்டம் போட்டு வருகிறார் சத்யராஜ். கூடவே கவுண்டமணி வேறு..
இதில் என்ன சமூக கருத்து இருக்கோ, இவரு கேரக்டர புரிஞ்சுக்கவே முடியலையே...


Click it and Unblock the Notifications











