பிரெஞ்சுப் புரட்சிக்கு இணையானது இந்த மாணவர் புரட்சி! - சத்யராஜ்
ஜல்லிக்கட்டுக்காக மாணவர் செய்த புரட்சி, பிரெஞ்சுப் புரட்சிக்கு நிகரானது என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, :ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இப்படி ஒரு எழுச்சியை நான் எதிர்பார்க்கவில்லை.

இந்த எழுச்சி என்பது பிரெஞ்சு புரட்சி என்று சொல்வது போல், இது ஜல்லிக்கட்டுக்கான புரட்சி என்று சொன்னால் சரியாக இருக்கும். உலகத்திலேயே இப்படி ஒரு புரட்சி நடந்தது இல்லை. இவ்வளவு கட்டுக்கோப்பாக பல லட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு வந்து போராடி உள்ளனர். இந்த இளைஞர் சமுதாயத்தையும், மாணவர் சமுதாயத்தையும் தலைவணங்கி நான் ஏற்றுக்கொள்கிறேன்.
எங்களுக்கு மாணவர்கள் பாடமாக உள்ளனர். இனி அவர்களைத்தான் நாங்கள் பின்பற்றிச் செல்ல வேண்டும். இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஓரிரு அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும். அது தவிர்க்க முடியாத ஒன்று.
அதே நேரம் மாணவர்கள் தரப்பில் இருந்தும், இளைஞர்கள் தரப்பில் இருந்தும் எந்த வன்முறையும் ஏற்படவில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில், வெளியில் இருந்து எந்த விதமான சக்தி அவர்களை குழப்பிவிட்டது என்பதை எப்படி கூறமுடியும். இதுதொடர்பாக வழக்கு இருப்பதால் இதுகுறித்து மேற்கொண்டு கருத்துகள் கூற முடியாது," என்றார்.


Click it and Unblock the Notifications











