எதிர்பார்த்த வெற்றியை தராத தங்கமகன்...செல்வராகவனைக் காக்க வைக்கும் தனுஷ்
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்த புதிய படம், ஒருசில மாதங்கள் தள்ளிப் போகலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தனுஷ் தற்போது துரை செந்தில்குமாரின் கொடி படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறனின் விசாரணை மற்றும் ஹிந்தியில் ஒரு புதிய படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக 2016 ம் ஆண்டு தொடக்கத்தில் செல்வராகவன் படத்தில் தனுஷ் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போதைய நிலவரப்படி முதலில் துரை செந்தில்குமாரின் கொடி படத்தை முடித்து விட்டே செல்வராகவன் படத்தில் தனுஷ் நடிக்கிறாராம்.

தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான தங்கமகன் திரைப்படம் சரியாகப் போகவில்லை என்பதால், தான் அடுத்தடுத்து நடிக்க வேண்டிய படங்களில் தனுஷ் மிகவும் அக்கறை காட்டுவதாகவும் அதுவே இந்த தாமதத்திற்குக் காரணம் என்றும் கூறுகின்றனர்.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு தனுஷ்- செல்வராகவன் இந்தப் படத்தின் மூலம் 4 வது முறையாக இணைகின்றனர்.
மேலும் மயக்கம் என்ன படத்திற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து தனுஷ்- செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைவதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இதற்கிடையில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் செல்வராகவன் வசனம் எழுதிய மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் வருகின்ற புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது.
செல்வராகவன் -சிம்பு கூட்டணியில் உருவாகி வந்த கான் படத்தை தனுஷ் படத்திற்காகத் தான் செல்வராகவன் நிறுத்தி வைத்தார் என்று முன்னர் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











