கலாபவன் மணி.. அமைதி காக்கும் மோகன்லால்.. ரசிகர்கள் கடும் கண்டனம்
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து அமைதியாக இருக்கும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டி வருகிறார்கள்.
கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நடிகர் கலாபவன் மணி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் இழந்தார். அவரது மரண செய்தி அறிந்து மலையாள திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகர், நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தங்களின் கவலையை தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மோகன்லால் மணி பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு போட்டோ போட்டுவிட்டு அமைதியாக இருந்துவிட்டார்.
நான் மோகன்லால் ரசிகன் என்று பெருமையாக கூறி வந்தவர் மணி. மணியும், மோகன்லாலும் சேர்ந்து ஆரம் தம்பூரான், நரசிம்மம், சோட்டா மும்பை உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மணியின் மரணம் குறித்து அமைதி காக்கும் மோகன்லாலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்ச்சித்துள்ளனர். அவருக்கு ஏதாவது என்றால் நல்லா பேசுவாரு, சக நடிகர்களுக்கு ஏதாவது என்றால் வாய் திறக்க மாட்டாரு என்று விமர்சித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











