ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்துவதா? - சிம்பு வேதனை!
சென்னை: தமிழகத்தின் கலாச்சாரப் அடையாளமாக, வீர விளையாட்டாகப் பார்க்கப்படும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு வேதனைத் தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையான இந்த விளையாட்டுப் போட்டியை நடத்த திடீரென 2014-ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளும் ஜல்லிக்கட்டு நடக்காததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகத்தில் நடைபெறவேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடந்தே தீர வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் இந்தத் தடையை அனுமதிக்க முடியாது என்று அறிக்கை வெளியிட்டார் நடிகர் சிம்பு.
அடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தாக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நடிகர் சிம்பு கூறுகையில், "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டு வேதனையடைந்தேன். ஒரு தமிழ்ச் சகோதரனாக அவர்களுக்கு நான் ஆதரவளிக்கிறேன். இதற்கு மேலும் என்னால் சும்மா இருக்கமுடியாது. அவர்கள் தங்கள் நிறத்தை வெளிப்படுத்திவிட்டார்கள். இப்போது தமிழர்களான நாம் நம்முடைய ஒற்றுமையையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தவேண்டும். உண்மையான தமிழர்களால் என்ன செய்யமுடியும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்," என்றார்.


Click it and Unblock the Notifications











