ரஜினிமுருகனுக்காக 5 கோடியை விட்டுக் கொடுத்த சிவகார்த்திகேயன்?
சென்னை: தனது நடிப்பில் உருவாகி இருக்கும் ரஜினிமுருகன் படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட, நடிகர் சிவகார்த்திகேயன் 5 கோடிகளை கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், சூரி, டி.இமான் மற்றும் பொன்ராம் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ரஜினிமுருகன்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் தந்த நம்பிக்கையால் திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி இந்தப் படத்தை வாங்கி வெளியிட முன்வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதமே திரைக்கு வரவேண்டிய ரஜினிமுருகன் படம் லிங்குசாமிக்கு ஏற்பட்ட கடன் தொல்லைகள் காரணமாக தொடர்ந்து தள்ளிப் போனது.
கடைசியாக டிசம்பர் மாதம் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை, வெள்ளம் காரணமாக மீண்டும் ரஜினிமுருகன் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பென் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்திற்கு உதவி செய்ய முன்வந்ததால், வருகின்ற பொங்கல் தினத்தில் ரஜினிமுருகன் கண்டிப்பாக திரைக்கு வரும் என்று படக்குழுவினர் விளம்பரம் செய்து வருகின்றனர்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் தனது பங்கிற்கு சுமார் 5 கோடிகளை கொடுத்து உதவி செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதனால் ரஜினிமுருகன் கண்டிப்பாக இந்த பொங்கல் தினத்தில் வெளியாகும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று திரையுலகினர் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications