திருட்டு வீடியோவைத் தடுக்க ரெமோ சிவகார்த்திகேயனின் அதிரடித் திட்டம்!
திருட்டு வீடியோவுக்கு எதிராக தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல குரல்கள் எழுந்தாலும், அவை எழுந்த வேகத்தில் அடங்கிப் போகின்றன.
என்ன பண்ணாலும் திருட்டு வீடியோவை ஒழிக்க முடியவில்லை.
காரணம்... புதிய படங்கள் இங்கே வெளியாகும் முன்பே வெளிநாடுகளில் வெளியாகிவிடுவதுதான். எப்எம்எஸ் எனும் வெளிநாட்டு உரிமை மூலம் கணிசமான பணம், அதுவும் உடனுக்குடன் கிடைப்பதால் தயாரிப்பாளர்களும் அந்தப் பணத்துக்கு ஆசைப்பட்டு வெளிநாடுகளின் விநியோகஸ்தர்களுக்கு அனைத்து உரிமைகளையும் எழுதிக் கொடுத்து விடுகிறார்கள்.

அங்கிருந்து வருவதுதான் திருட்டு வீடியோ பிரச்சினை.
ரெமோவுக்கு அந்தப் பிரச்சினை வரக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள சிவகார்த்திகேயன் துணிந்து ஒரு முடிவெடுத்தார். ரெமோவின் வெளிநாட்டு விநியோகத்தை இரண்டு தினங்கள் தள்ளி ஆரம்பிப்பதுதான் அது.
ரெமோ தமிழகத்தில் மட்டும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும். பிற நாடுகளில் அக்டோபர் 9-ம் தேதிதான் வெளியாகும்.
இதன் மூலம் முதல் மூன்று நாட்களில் இணையத்தில் வெளியாவது மற்றும் திருட்டு வீடியோ வெளியீட்டைத் தடுக்க முடியும் என்று நம்புகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த துணிச்சல், இப்போதுள்ள பெரும்பாலான பெரிய நடிகர்களின் படத் தயாரிப்பாளர்களுக்கே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











